இந்திய டெலிகாம் சந்தை 5ஜி ஸ்பெக்டரம் ஏலத்துடன் வேகமாக வளர்ச்சி அடையக் காத்திருக்கும் நிலையில், பிப்ரவரி மாத டிராய் தரவுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ஆதிக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனாலும் இன்று பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளித்தது.
டிராய்
டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய், இந்திய டெலிகாம் நிறுவனங்களின் பிப்ரவரி மாத வாடிக்கையாளர் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்டு உள்ளது. இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2வது மாதமாகத் தொடர்ந்து சரியத் துவங்கியுள்ளது.
பிப்ரவரி மாத தரவுகள்
பிப்ரவரி மாத தரவுகளைப் பார்க்கும் போது அதிகப்படியான கடன் நெருக்கடியில் தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தைக் காட்டிலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இதேவேளையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிகப்படியான புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா பிப்ரவரி மாதம் 15 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில், ஜியோ 2 மடங்கிற்கு அதிகமாக அதாவது 37 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 16 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
மேலும் செப்டம்பர் 2021ல் இருந்து 6 மாத காலத்தில் வோடபோன் போன் 75 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ சுமார் 4.11 கோடி அதாவது 5 மடங்கு அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை இழந்தாலும் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாகத் தொடர்ந்து விளங்குகிறது.
5ஜி சேவை
5ஜி டெலிகாம் சேவையை அறிமுகம் செய்ய அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தயாராக உள்ள நிலையில், டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் விலை
டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 3300-3670 MHz பேண்டில் இருக்கும் 5ஜி அலைக்கற்றைக்கான விலையை முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விடவும் 35 சதவீதம் குறைத்து 317 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்ய டிராய் பரிந்துரைத்துள்ளது.


Click it and Unblock the Notifications