ரிலையன்ஸ் ஜியோ வந்த பின் தான் இந்தியாவில் ஆன்லைன் சார்ந்த வியாபாரங்கள் எல்லாமே சூடுபிடிக்கத் தொடங்கியது.
இன்று அதிக நேரம் ஃபேஸ்புக் பார்ப்பது தொடங்கி, பலரும் டிக் டாக், யூ டியூப், மியூச்சிக்கலி என தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதற்கும் மிக முக்கிய காரணம் ஜியோ தான் என்றால் அது மிகை அல்ல.
அப்படிப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ, கூடிய விரைவில் சிறப்பாக கல்லாகட்டத் தொடங்கலாம் என ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள் Sanford C. Bernstein & Co. நிறுவன அனலிஸ்ட்கள். எப்படி கல்லாகட்டும் வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
வாடிக்கையாளர்கள்
ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு போட்டி நிறுவனங்களாக இருக்கின்றன. கடந்த அக்டோபர் 2019-ல் வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏர்டெல் சுமாராக 35,000 கோடி ரூபாயும், வொடாபொன் ஐடியா சுமார் 53,000 கோடி ரூபாயும் அரசுக்கு செலுத்த வேண்டி இருக்கிறது.
தப்பிக்குமா
ஏர்டெல் ஓரளவுக்கு இழுத்துப் பிடித்துச் தான் செலுத்த வேண்டிய தொகையில் சுமாராக 18,000 கோடி ரூபாயைச் செலுத்திவிட்டது. ஆனால் வொடாபோன் ஐடியா, இதுவரை சுமாராக 3,500 கோடி ரூபாய் தான் செலுத்தி இருக்கிறது. எனவே வொடாபோன் ஐடியா தன் முழு தொகையையும் ஒழுங்காகச் செலுத்தி பழைய படி வியாபாரம் பார்ப்பது சிரமமாகத் தான் தெரிகிறது.
வாடிக்கையாளர்கள்
இப்போதே, வொடாபொன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் நெட்வொர்க்கை விட்டு வெளியேறத் தொடங்கி இருக்கிறார்கள். வொடாபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து, கடந்த டிசம்பர் 2019-ம் மாதத்தில் 3.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 11,000 பேர் வெளியேறி இருக்கிறார்களாம். ஆனால் ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் டிசம்பர் 2019-ல் 82,308 வாடிக்கையாளர்கள் இணைந்து இருக்கிறார்களாம்.
பட்டியலிடுதல்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில் மற்றும் டெலிகாம் வியாபாரத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தனியாக பங்குச் சந்தைகளில் பட்டியலிடும் வேலையைத் தொடங்கி இருப்பதாக, முகேஷ் அம்பானி கடந்த ஆண்டே சொன்னது குறிப்பிடத்தக்கது. இப்படி தன் பங்குகளை பட்டியலிட்டால் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரிக்காதா என்ன..?
கவர்ச்சிகரமான கம்பெனி
ஒருவேளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்கிற மிகப் பெரிய கார்ப்பரேட் குழுமத்தில் இருந்து, ரிலையன்ஸ் ஜியோவை தனியாகப் பிரித்து கொண்டு வரப்பட்டால், ரிலையன்ஸ் ஜியோ தான் உலகிலேயே அதிக கவர்ச்சிகரமான டெலிகாம் கம்பெனியாக இருக்கும் என அனலிஸ்டுகள் உச்சி முகர்ந்து பாராட்டி இருக்கிறார்கள்.
ஆட்சி செய்தல்
அமெரிக்காவில் Exxon Mobil Corp. எரிபொருள் சந்தையை பெரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதே போல அமெரிக்க டெலிகாம் துறையை AT&T Inc என்கிற நிறுவனமும், அமெரிக்காவின் ரீடெயில் வியாபாரத்தை Amazon நிறுவனமும் பெரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் எரிபொருள், டெலிகாம், ரீடெயில் என மூன்று பெரிய வியாபார சந்தையையும், நம் ரிலையன்ஸ் தான் பெரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆக தன் வியாபாரத்தை மேலும் வளர்ப்பதில் ரிலையன்ஸுக்கு பெரிய தடை ஒன்றும் இருக்காது.
பணக்காரர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 42 % பங்குகளை வைத்திருக்கும் போதே உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி. இதே போல ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனங்களையும் பட்டியலிட்டு ஒரு கணிசமான பங்கை கையில் வைத்துக் கொண்டால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்னும் எவ்வளவு அதிகரிக்கும்..?