இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது 3 தனிப் பிரிவுகளாக இயங்கி வருகிறது, அதாவது எண்ணெய் டூ கெமிக்கல், டெலிகாம், ரீடைல் ஆகிய பிரிவுகளின் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.16 சதவீதம் வரையில் சரிந்து 2,471.95 ரூபாய் அளவில் முடிந்துள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ செப்டம்பர் காலாண்டு முடிவுகளை முழுமையாகப் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ
செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் லாபம் காலாண்டு அடிப்படையில் 4 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 28 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ 3,528 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற நிலையில், தற்போது 4518 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
வருவாய்
ரிலையன்ஸ் ஜியோ பிரிவின் வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து 22,521 கோடி ரூபாயை வருவாயாகப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 18,731 கோடி ரூபாய் அளவிலான வருவாய் மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
EBITDA அளவு
மேலும் ரிலையன்ஸ் ஜியோ பிரிவின் EBITDA அளவு ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பர் காலாண்டில் 4.8 சதவீதம் உயர்ந்து 11,489 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 90 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 51 சதவீதமாக உள்ளது.
5ஜி சேவை
ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் பணியில் மிகவும் தீவிரமாக உள்ளது, 5ஜி நெட்வொர்க் கருவிகளுக்காக இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரனாசியில் 5ஜி சேவை அளிக்கப்படுகிறது.