அகமதாபாத்: ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஆட்டம் கண்டது எந்த அளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு ஜியோவின் வாடிக்கையாளர்களும் குறுகிய காலத்தில் அதிகரித்தார்கள்.
ஜியோ நிறுவனம் தான் முதலிடம் என்ற விஷயம் அனைவரும் அறிந்தது தான். எனினும் மாநில வாரியாக எப்படி செயல்பாட்டில் இருந்து வருகிறது என்றும், அதிலும் குஜராத் மாநிலத்தில் எப்படி செயல்பாட்டில் உள்ளன என ஒரு அறிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தான் இதிலும் முதலிடம். கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், சரிசெய்யப்பட்ட வருவாய் 685.54 கோடி ரூபாயாக இருந்துள்ளது இந்த நிறுவனம். அதிலும் ஒரு நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே இந்த அளவுக்கு சிறப்பான வெளியீட்டை கண்டுள்ளது மிகப்பெரிய சாதனை தான்.
எனினும் வோடபோன் ஐடியா நிறுவனம், குஜராத்தில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டத்தைக் கொண்டுள்ளது. ஆனாலும் இதன் சரிசெய்யப்பட்ட வருவாய் 2.7 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 643.53 கோடி ரூபாயும், இதே செப்டம்பர் காலாண்டில் 626.12 கோடி ரூபாயும் கண்டுள்ளது.
இதே பார்தி ஏர்டெல் நிறுவனம் சரிசெய்யப்பட்ட வருவாயில் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. இது ஜூன் காலாண்டில் 173.2 கோடி ரூபாயாக இருந்துள்ளது. எனினும் செப்டம்பர் காலாண்டில் 172.84 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு துறையின் ஒழுங்கு முறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குஜராத்தில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொத்த சரிசெய்யப்பட்ட வருவாய் 3.82 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஜியோ மற்றும் பிஎஸ்என்எல்லின் வலுவான செயல்திறன் காரணமாக ஏஜிஆர் இரட்டை இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.
ஜூன் காலாண்டில் ஜியோவின் ஏஜிஆர் 617.65 கோடி ரூபாய் என்றும், இது செப்டம்பர் காலாண்டில் 11 சதவிகிதம் அதிகரித்து 685.54 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போல் பிஎஸ்என்எல் ஜூன் காலாண்டில் 70.97 கோடி ரூபாயாக இருந்துள்ளது. எனினும் இது செப்டம்பர் காலாண்டில் 78.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தவிர செப்டம்பர் மாதத்தில் குஜராத்தில் மொத்த மொபைல் சந்தாக்கள் 6.87 கோடி பயனர்களாக அதிகரித்துள்ளதாகவும் டிராய் தரவு மூலம் அறிய முடிகிறது.