இந்தியாவில் கடந்த 4 வருடத்தில் இண்டர்நெட் சேவையின் தரம் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது, அதேவேளையில் இண்டர்நெட் டேட்டாவின் விலையும் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக டிஜிட்டல் சேவைக்கான வர்த்தகமும் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இந்த டிஜிட்டல் சேவை புரட்சியில் பெரிய அளவில் வளர்ந்தது வர்த்தகச் சந்தையைக் கட்டமைத்தது அன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தான்.
4 வருடங்களுக்கு முன் பெரு நகரங்களை மட்டுமே நம்பியிருந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் இன்று டிஜிட்டல் சேவை புரட்சியின் மூலம் இந்தியாவில் சிறு குறு கிராமங்கள் வரையில் வாடிக்கையாளர்களைச் சம்பாதித்துள்ளது ஈகாமரஸ் நிறுவனங்கள்.
இந்நிலையில் முகேஷ் அம்பானி புதிதாகத் துவங்கியுள்ள ஜியோமார்ட், ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை சந்தையில் அடுத்த சில வருடத்தில் 50 சதவீத வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றுமாம்..
ஜியோமார்ட்
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் தற்போது மளிகை பொருட்கள் விற்பனை சந்தையைக் கைப்பற்ற அமேசான், பிளிப்கார்ட், க்ரோபர்ஸ், ஸ்விக்கி, பிக்பேஸ்க்ட், டாடா குரூப் மத்தியில் மிகப்பெரிய போட்டி நிலவி வரும் வேளையில், ஜியோமார்ட் இப்பிரிவில் பெரிய அளவிலான வர்த்தகத்தை மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெற்று வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் மற்ற நிறுவனங்கள் இப்பிரிவில் வர்த்தகத்தைப் பெறத் திணறி வரும் வேளையில், ஜியோமார்ட் ஒவ்வொரு மாதமும் இரண்டு இலக்கு வளர்ச்சியை அடைந்து வருகிறது.
2025ல் ஜியோமார்ட்
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டுச் சந்தை ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாச்சீஸ் நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள்ள ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை சந்தையில் 50 சதவீத வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
கொரோனா
அம்பானி டிசம்பர் 2019ல் மும்பையில் மட்டும் ஜியோமார்ட் சேவையை அறிமுகம் செய்த நிலையில் கொரோனா காலத்தில் பிற எந்த நிறுவனத்திற்கும் இல்லாமல் ஒரு வர்த்தக வாய்ப்பு ஜியோமார்ட்-க்கு உருவானது.
அதிரடி வளர்ச்சி
இந்தியாவில் பிற எந்த ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் இல்லாத ஒரு விஷயம் ஜியோமார்ட்க்கு உள்ளது. ஜியோமார்ட்-ன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் இந்தியா முழுவதும் 10,000க்கும் அதிகமாகக் கடைகளில் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் ஜியோமார்ட் சேவை விரிவாக்கம் செய்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இதனால் ஒரு சில வாரத்தில் ஜியோமார்ட் இந்தியாவில் 200 நகரங்களில் சேவை விரிவாக்கம் செய்து சாதித்தது.
போட்டி நிறுவனங்கள்
ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனைக்காக அமேசான் பிரஷ் 9 நகரங்களிலும், பிளிப்கார்ச் சூப்பர்மார்ட் 5 நகரங்களிலும், ஸ்விக்கி ஸ்டோர்ஸ் 30 நகரங்களிலும், பிக்பேஸ்கட் 26 நகரங்களிலும், க்ரோபர்ஸ் 30 நகரங்களிலும் மட்டுமே சேவை அளித்தும் வரும் நிலையில் ஜியோமார்ட் சுமார் 200க்கும் அதிகமான நகரங்களில் சேவை அளித்து வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக ஆன்லைன் - ஆப்லைன் வர்த்தக முறையில் முதல் முறையாக வெற்றி கண்ட நிறுவனமாக மாறியுள்ளது ஜியோமார்ட்.
4 லட்சம் ஆர்டர்கள்
இதேபோல் ஜியோமார்ட்-ன் ஆப் டவுன்லோடுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மளிகை பொருட்களைத் தாண்டி ஆடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது ஜியோமார்ட்.
இதன் மூலம் தினமும் 4,00,000 ஆர்டர்களை ஜியோமார்ட் பெற்று நாடு முழுவதும் சேவை அளித்து வருகிறது.
ஜியோமார்ட்-வாட்ஸ்அப்
பேஸ்புக் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 5.7 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்துள்ள நிலையில், ஜியோமார்ட் தளம் வாட்ஸ்அப் உடன் இணைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் பல கோடி பேர் வைத்துள்ள நிலையில், இந்த இணைப்பு ஜியோமார்ட்க்கு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.