முகேஷ் அம்பானி சொன்னதைப் போலவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கடனில்லான நிறுவனமாக மாற்றிவிட்ட நிலையில், அடுத்த திட்டத்தில் இறங்கியுள்ளார்.
Recommended Video
ஜியோ டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவை வைத்து 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை ஈட்டியுள்ளார் முகேஷ் அம்பானி, இதேபோல் ரீடைல் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஜியோமார்ட் சேவையை ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர் விரிவாக்க பணிகள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் பியூச்சர் குரூப் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்ற திட்டத்துடனும், முதலீட்டாளர்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பும், லாபமும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஜியோ மர்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தனித்தனியாகப் பங்குச்சந்தையில் பட்டியலிட முகேஷ் அம்பானி முடிவு செய்வார் எனத் தெரிகிறது.
24.7 சதவீத பங்குகள்
ரிலையன்ஸ் இந்த லாக்டவுன் காலத்தில் ஜியோ நிறுவனத்தின் 24.7 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 22.3 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டையும், ரிலையன்ஸின் ரைட்ர்ஸ் விற்பனை மூலம் 7 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது
இது எந்த ஒரு இந்திய நிறுவனத்தாலும் ஈட்ட முடியாத மிகப்பெரிய முதலீடு என்றால் மிகையில்லை. காரணம் ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டு வெறும் 4 வருடம் மட்டுமே ஆன நிலையில் இந்நிறுவனப் பங்கு விற்பனை மூலம் 22.3 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது சாதனை என்று தான் கூறவேண்டும்.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்த அதிரடி முதலீடுகள் மூலம் ரிலையன்ஸ் தற்போது கடனில்லா நிறுவனமாக மாறியுள்ள நிலையில், அடுத்த 3 அல்லது 4 வருடத்தில் ரிலையன்ஸ் தனது வர்த்தகத்தை 3 ஆகப் பிரித்துத் தனித்தனியாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடும். இதுவும் குறிப்பாக ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்துப் பட்டியலிட முயற்சி செய்யும் என Bernstein Research நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆராம்கோ டீல்
கச்சா எண்ணெய் சந்தையும் தற்போது சரிவில் இருந்து மீண்டு வரும் காரணத்தால் கூடிய விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் முதல் கெமிக்கல் வர்த்தகத்தில் சவுதி ஆராம்கோவின் 15 பில்லியன் டாலர் முதலீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அளவு கடந்த பணப்புழக்கம்
அடுத்தடுத்த முதலீடுகளால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அளவுகடந்த பணம் இருக்கும், வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பணம் முதலீடு செய்யப்பட்டாலும், பெருமளவிலான பணம் மீதமிருக்கும்.
இந்தப் பணத்தை வைத்துச் சந்தையில் போட்டி நிறுவனங்கள், புதிய வர்த்தகத்தில் இறங்க புதிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவதிலும், பங்குகளை வாங்குவதிலும் செலவிடும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
அதிரடி வளர்ச்சி
இதனால் அடுத்த 3 முதல் 4 வருடங்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய், டெலிகாம், ரீடைல் மட்டும் அல்லாமல் பல துறைகளில் புதிய வர்த்தகத்தையும், அதிரடியான வளர்ச்சியைச் சந்திக்கப்போகிறது.
இது முதலீட்டாளர்களின் முதலீடு மதிப்பைப் பல மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.