நாட்டின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் சமீபத்தில் தான் ஈ-காமர்ஸ் வணிகத்தினை தொடங்கியது. தற்போது அதனை மற்ற சர்வதேச நிறுவனங்களுக்கு இணையாக மாற்ற, அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக ஆன்லைனில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய ஜியோ மார்ட் சமீபத்தில் தொடங்கியது.
இந்த நிலையில் தான் தனது ஈ- காமர்ஸ் வணிகத்தினை மேம்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முகேஷ் அம்பானி.
நெட்மேட்ஸில் முதலீடு
இதன் ஒரு படியாக ஆன்லைன் பார்மசி நிறுவனமான நெட்மேட்ஸின் 60% பங்குகளை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தில் அவர் 620 கோடி ரூபாய் ரிலையன்ஸ் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் மருந்து விற்பனை, குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் மருத்துவர்கள் புக்கிங் ஆகியவற்றை நெட்மேட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை
இதுமட்டும் அல்ல, இன்னும் தனது வணிகத்தினை மேம்படுத்துவதற்காக, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக அர்பன் லேடர், மில்க் பாஸ்கெட், ஜிவாமே உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் முகேஷ் அம்பானி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
என்னென்ன நிறுவனம்?
இதன் காரணமாக ஆன்லைன் பர்னிச்சர் விற்பனை நிறுவனமான அர்பன் லேடர் மற்றும் ஆன்லைன் ஆர்டர் மூலம் பால் விநியோகம் செய்யும் மில்க் பாஸ்கெட், ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட்மெட்ஸ், பெண்களின் உள்ளாடை விற்பனை நிறுவனமான ஜிவாமே ஆகிய நிறுவனங்கள் விரைவில் அம்பானி வசம் வரலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மில்லியன் கணக்கில் முதலீடுகளை திரட்டியவர், தற்போது கோடிக் கணக்கில் முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளார்.
அமேசானுக்கு எதிரான நடவடிக்கை
முன்னணி போட்டியாளரான அமேசான் பெங்களூரில் தனது ஈகாமர்ஸ் வணிகம் மூலம் மருந்துகளை டெலிவரி செய்து வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன. இவர்களோடு மெட் லைஃப் மற்றும் பார்ம் ஈஸி உள்ளிட்ட இரு வீரர்களும், இந்த இணைப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தரமான மருந்துகளை டெலிவரி செய்ய திட்டம்
இதன் மூலம் ரிலையன்ஸ் நல்ல தரமான மற்றும் மலிவான சுகாதார பொருட்களை வழங்ககும் எனவும், இதோடு தனது சில்லறை வர்த்தகத்தினையும் மேம்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்த்த நெட்மேட்ஸ், ரிலையன்ஸ் குடும்பத்துடன் இணைந்து தனது தரமான சுகாதார சேவையை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.