கொரோனா காலத்தில் கூட மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்த ஒரு நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான்.
ஏனெனில் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட பல ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. முதலில் ரிலையன்ஸின் ஜியோ 1.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த நிலையில், தற்போது அந்த லிஸ்டில் ரிலையன்ஸ் ரீடெயில் வர்த்தகமும் இணைந்துள்ளது.
சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் ஜியோ மார்ட் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் களமிறங்கியது. ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு சில்லறை வர்த்தக கடைகள் இந்தியா முழுவதும் இருந்தாலும், ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் சமீபத்தில் தான் களமிறங்கியது.
ஜியோ தான் டாப்
இது அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுக்கு எதிரான வர்த்தக போராவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் தான் எந்த தொழில் தொடங்கினாலும், அதில் போட்டியாளர்களை விஞ்சி தனி காட்டு ராஜாவாக வருவது தான் முகேஷ் அம்பானியின் பானி. அதற்கு சிறந்த உதாரணம் ரிலையன்ஸ் ஜியோ. வொடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் பல வருடங்களாக தொலைத்தொடர்பு துறையில் இருந்தாலும், அதன் பின்னர் வந்த ஜியோ தான் இன்று தொலைத் தொடர்பு துறையில் நம்பர் 1 ஆக உள்ளது.
சில்லறை வர்த்தகத்திற்காக முதலீடு
ஆக இப்படி எந்த வர்த்தகமானாலும் அதில் வெற்றிக் கனியை பறித்து வரும் முகேஷ் அம்பானிக்கு, இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தகத்திலும் வெற்றிக் கொடியை நிலை நாட்டவே சமீபத்தில் பல முதலீடுகளை திரட்டினார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனது சில்லறை வர்த்தகத்திற்காக முதலீடுகளை திரட்டி வருகின்றார்.
ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் முதலீடு
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து வந்த நிறுவனங்கள் பல ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்திலும் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக சில்வர் லேக் நிறுவனம் செப்டம்பர் 25 அன்று 7500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளது. சில்வர் லேக் நிறுவனத்தின் துணை முதலீட்டாளர்கள் அக்டோபர் 9 அன்று 1875 கோடி ரூபாயினையும், இதே கேகேஆர் நிறுவனம் அக்டோபர் 14 அன்று 5550 கோடி ரூபாயினையும் முதலீடு செய்துள்ளன.
சில்லறை வர்த்தகத்தில் முதலீடுகள்
இதே சவுதியின் முபதாலா நிறுவனம் அக்டோபர் 15 அன்று, 6,247.50 கோடி ரூபாயினையும், ஏடிஐஏ நிறுவனம் அக்டோபர் 15 அன்று 5512.50 கோடி ரூபாயும், ஜிஐசி அக்டோபர் 16 அன்று 5512.50 கோடி ரூபாயும், TPG நிறுவனம் அக்டோபர் 19 அன்று 1837.50 கோடி ரூபாயும், ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் அக்டோபர் 21 அன்று 3675.50 கோடி ரூபாயும், இதே பிஐஎஃப் நிறுவனம் நவம்பர் 9 அன்று 9555 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன. ஆக மொத்தம் இந்த 9 முதலீட்டாளர்களும் 47,265 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
அர்பன் லேடர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது
இந்த நிலையில், அர்பன் லேடர் ஹோம் டெகார் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 182 கோடி ரூபாய் முதலீடு செய்து அந்நிறுவனத்தில் 96 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம். மீதமிருக்கும் நான்கு சதவிகித பங்குகளை வாங்குவதற்கும் இந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பர்னிச்சர் நிறுவனம் கையகப்படுத்தல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம், ஆன்லைன் பர்னிச்சர் துறைக்குள் நுழைவதால். இது இத்துறை சார்ந்த மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் பர்னிச்சர் சந்தையில் தற்போது ஃப்ளிப்கார்ட், அமேசான், பெப்பர் ப்ரை உள்ளிட்ட ப்ல நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அர்பன் லேடர் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது.
இன்னும் லிஸ்டில் பல உண்டு
இது தவிர ஆன்லைன் பர்னிச்சர் விற்பனை நிறுவனமான அர்பன் லேடரைத் தொடர்ந்து, ஆன்லைன் ஆர்டர் மூலம் பால் விநியோகம் செய்யும் மில்க் பேஸ்கெட், ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான நெட் மெட்ஸ், பெண்களின் உள்ளாடை விற்பனை நிறுவனமான ஜிவாமே உள்ளிட்ட நிறுவனங்களையும் முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாகத் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இது அமேசான், வால்மார்டுக்கு பிற்காலத்தில் சரியான போட்டியாக மாறும் என்பது மட்டும் உறுதியாக இதன் மூலம் தெரிகிறது.