இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஜப்பானிய செமிகண்டக்டர் நிறுவனமான ரெனேசாஸ் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிறுவனங்கள் கைகோர்த்தால் செமிகண்டக்டர் துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களுடன் தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனமும் இணைய உள்ளதால் இந்தியாவின் தொழில்துறை மிகப்பெரிய அளவில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செமிகண்டக்டர் துறை
இந்தியாவில் செமிகண்டக்டர் துறை கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் ஜப்பானிய செமிகண்டக்டர் உற்பத்தியாளர் ரெனேசாஸ் எலக்ட்ரானிக் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் தேஜாஸ் நெட்வொர்க் ஆகியவற்றுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரெனேசாஸ் எலக்ட்ரானிக் நிறுவனம்
மேலும் ரெனேசாஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் பெங்களூரில் ஒரு கூட்டு சிஸ்டம் சொல்யூஷன் டெவலப்மென்ட் சென்டரை நிறுவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் செமிகண்டக்டர் துறையின் உள்கட்டமைப்பு, தொழில்துறை மற்றும் வாகனப் பிரிவுகளுக்கான விரிவான அமைப்பு தீர்வுகளில் கவனம் செலுத்தும்.
டாடா குழுமம்
ஏற்கனவே டாடா குழுமம் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் உற்பத்தி வசதி அமைக்கும் திட்டங்கள் குறித்து அறிவித்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கம் வரை அரசாங்கத்துக்கு செமிகண்டக்டர் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யவில்லை.
டாடா எலக்ட்ரானிக்ஸ்
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்று பெயரிடப்பட்ட புதிய நிறுவனத்தில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை அமைக்க டாடா குழுமம் 5000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது.
மூன்று முன்னணி நிறுவனங்கள்
டாடா குழுமம் செமிகண்டக்டர் துறையில் சிறப்பாக முன்னேறி வரும் நிலையில் தற்போது ரெனேசாஸ் சிஸ்டம் நிறுவனமும் கைகோர்க்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனமும் இணைய உள்ளதை அடுத்து வளர்ந்து வரும் வாகனத் தேவைகள் மற்றும் எதிர்கால எலக்ட்ரானிக் வாகன திட்டங்களை நிவர்த்தி செய்யும் எனகூறப்படுகிறது.
நல்ல அறிகுறி
செமி கண்டக்டர் ஆய்வாளர் அருண் மாம்பஜி அவர்கள் இதுகுறித்து தெரிவித்தபோது டாடா போன்ற புகழ்பெற்ற பெரிய குழுமம் செமிகண்டக்டர் துறைகளில் ஈடுபடுவது இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்பின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல அறிகுறி என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாடு, மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டரில், 'இந்தியாவின் 400 பில்லியன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் லட்சியம் மற்றும் இலக்குகளுக்கு இது ஒரு முக்கியமான கூட்டணியாக இருக்கும். இந்த கூட்டாண்மை சிறந்த வெற்றியை பெற நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன்
டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நிகழ்கால, எதிர்கால தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் போன்ற துறைகளில் ரெனேசாஸுடன் ஒத்துழைப்பதில் பெரும் திறனை நாங்கள் காண்கிறோம். இந்த ஒத்துழைப்பு இந்தியாவிலும் உலக அளவிலும் எங்கள் இருப்பை விரைவுபடுத்தும்' என்று கூறினார்.
வெற்றிப்பாதை
ரெனேசாஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிடெடோஷி ஷிபாடா அவர்கள் கூறுகையில், "ரெனேசாஸ் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்திய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளின் பயன்பாடுகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என்றும், இது எங்கள் இரு நிறுவனங்களையும் தொடர்ச்சியான வெற்றிப் பாதையை அமைத்துள்ளது' என்று கூறியுள்ளார்.