கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது பெங்களூர் நகரம் . இந்தியாவின் சிலிக்கான் வேலி , ஸ்டார்ட் அப் நகரம் என பல்வேறு பெயர் பெங்களூருக்கு உண்டு . உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகங்களை பெங்களூருவில் அமைக்கின்றன.
இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் தாயகமாக பெங்களூரு தான் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பெங்களூர் நகரம் தன்னை முதலீட்டுக்கான நகரமாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது . ஆனால் அண்மைக்காலமாக பெங்களூரு நகருக்கு மாற்றாக சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் , ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம், அமராவதி உள்ளிட்டவை மாறி வருகின்றன .

குறிப்பாக ஆந்திர மாநில அரசு கூகுள், இன்போசிஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை எல்லாம் தங்கள் பக்கம் வேகமாக ஈர்த்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கர்நாடக மாநில அரசு ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை தீட்டி இருக்கிறது . ஐடி கொள்கை 2025 -30 என்ற பெயரில் ஐந்து ஆண்டுகளுக்கான ஒரு ஐடி கொள்கையை கர்நாடக மாநில அரசு உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய மாநிலத்தில் அலுவலகங்களை நிறுவுவதற்கும் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் சலுகைகளை வாரி வழங்க இருக்கிறது.
பெங்களூருவை கடந்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் முதலீடு மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது என கர்நாடக மாநில அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதன்படி பெங்களூரு தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த நிறுவனங்கள் அமைக்கப்பட்டால் 2 கோடி வரை அல்லது அவர்களின் வாடகை தொகையில் 50 சதவீதம் வரை அரசே வழங்கும். மேலும் 3 ஆண்டுகளுக்கு சொத்து வரி தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு மின்சார கட்டணமே செலுத்த வேண்டிய அவசியமில்லை.
இது தவிர ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 12 லட்சம் ரூபாய் அல்லது 25 சதவீதம் வரை தொலைதொடர்பு மற்றும் இன்டர்நெட் கட்டணங்களையும் அரசே வழங்கி விடுமாம். இந்த அறிவிப்பு சிறிய மற்றும் மிடில் அளவில் இருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஊக்கமாக அமைந்திருக்கிறது. முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சொத்து வரி, வாடகை, மின்சார கட்டணம், இணைய சேவை கட்டணம் என அனைத்து முக்கிய செலவினங்களும் குறைகின்றன என்பதால் இது பெரிய முதலீடுகளை ஈர்க்கும் என கர்நாடக அரசு நம்புகிறது.
புதிய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பெங்களூருவில் ஏற்கனவே செயல்பட கூடிய நிறுவனங்களும் வேறு மாவட்டங்களில் விரிவாக்கம் செய்ய முன் வரும். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பரவலாகும் . தற்போது பெங்களூரு சிறந்த ஐடி நகரமாக இருந்தாலும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் தீரா பிரச்சினையாக உள்ளது. இதனால் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்வதை தடுக்க இப்படி ஒரு கொள்கையை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது.
445 கோடி ரூபாய் மதிப்பு கொண்டு இந்த ஐடி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மைசூர் ,மங்களூர் ,கலாபுராகி, பெலகாவி, சிவமோகா ஆகிய பகுதிகளில் பெங்களூரு போன்ற ஒரு வளர்ச்சியை கொண்டு வர அரசு முடிவு செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications