கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 40 வருட மோசமான நிலையை அடைந்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -7.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் தனது இருமாத நாணய கொள்கை கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் மிகவும் முக்கியமானதாகத் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலைக்கு விளங்குகிறது.
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம்
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்து அதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அனைவரும் கணித்தபடியே ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, தொடர்ந்து 4 சதவீதமாக இருக்கும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 3.35 சதவீதம் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்
இந்த அறிவிப்பால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறையக் கட்டாயம் வாய்ப்பு இல்லை. இதன் மூலம் கனவு வீட்டை வாங்கத் திட்டமிடுவோர் தற்போது வங்கிகளில் இருக்கும் மிகவும் குறைவான வட்டி விகிதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமும் குறையாது.
வங்கி வைப்பு நிதி வட்டி விகிதம்
மேலும் சாமானிய மக்கள் அதிகம் நம்பும் வங்கி வைப்பு நிதியில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இல்லை, இதனால் தொடர்ந்து வட்டி வருமானத்தில் எவ்விதமான சரிவும் ஏற்படாது என்பது மகிழ்ச்சியான விஷயம். இதேபோல் தொடர்ந்து உங்கள் பணத்தை வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம்.
வங்கியில் கடன் வாங்கியவர்கள்
இதோடு ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது, இதனால் கொரோனா காலத்தில் வருமானத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளவர்களுக்குக் கூடுதல் சுமை எதுவும் இருக்காது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி
இதேவேளையில் ரிசர்வ் வங்கி 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5% இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு நாட்டின் பொருளாதாரம் 10.5 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நுகர்வோர் பணவீக்கம்
மேலும் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 2021-22ஆம் நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார். இதோடு நாட்டின் பணவீக்கம் கொரோனா தொற்று உடன் தொடர்புடையதாக மாறியுள்ளது எனவும் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு பெரும் பிரச்சனை
நாட்டின் விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் விலைவாசி பணவீக்கத்தை மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் நுகர்வோர் அளவீட்டையும் குறைத்துள்ளது என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார்.