கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வர இந்தப் பண்டிகை காலம் அதிகளவிலான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என அனைத்துத் தரப்பு மக்கள் மற்றும் வர்த்தகத் துறைகளால் நம்பப்படுகிறது. இதற்காக வங்கிகள் முதல் உற்பத்தித் துறை வரையில் தள்ளுபடி, சலுகை, உற்பத்தி அதிகரிப்பு எனப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை நடைபெறும் காரணத்தால் பண்டிகை காலத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நாட்டின் வர்த்தகச் சூழ்நிலையை மேம்படுத்தவும் வங்கிகள் மூலம் மக்களுக்கு அதிகளவிலான கடன் விநியோகம் செய்ய ஏதுவாக ரிசர்வ் வங்கி இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் என அனைத்துத் தரப்பு மக்களாலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மறுபுறம் ரெப்போ விகிதம் தற்போது இருக்கும் அளவை விடவும் குறைத்தால் வங்கிகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் கருத்து நிலவியது. இந்நிலையில் 3 நாள் நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்து இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. கடந்த நாணய கொள்கையில் அறிவிக்கப்பட்ட 4 சதவீத ரெப்போ விகதமும், 3.35 சதவீத ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் அடுத்த 2 மாதத்திற்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு என்பதைத் தான் பார்க்கப்போகிறோம்.
ஈஎம்ஐ
கொரோனா பாதிப்பால் வேலை இழப்பு, சம்பள குறைப்புகளைச் சந்தித்துள்ள பல கோடி மக்கள் ரெப்போ விகிதம் குறைந்தால் தாங்கள் பெற்ற கடனுக்கான வட்டி குறைந்து செலுத்த வேண்டிய ஈஎம்ஐ தொகை குறையும் என எதிர்பார்த்து இருந்தனர். ரிசர்வ் வங்கியின் இன்றைய முடிவால் வட்டி குறைப்பை எதிர்பார்த்து இருந்த பல கோடி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வங்கிகள்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைக்காத காரணத்தால் தற்போது வணிக வங்கிகள் கடனுக்கான வட்டியை உயர்த்த வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வராக்கடன், வருமான சரிவு, போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அடுத்த 2 மாத இடைவெளியைப் பயன்படுத்திக் கடனுக்கான வட்டியை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
வீட்டு கடன்
இந்தப் பண்டிகை காலத்தில் துவண்டு போன ரியல் எஸ்டேட் துறையை மீட்டுக் கொண்டு வர வீட்டு கடன் பிரிவில் பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக வீட்டுக் கடன்கள் அனைத்தும் MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பண்டிகை காலத்தை முன்னிட்டு வங்கிகள் வட்டியை குறைக்காமல் மட்டுமே லாபம் கிடைக்கும், இல்லையெனில் தற்போது இருக்கும் அளவிலேயே தான் கடனை வாங்க வேண்டி இருக்கும்.
ஆனால் தற்போது பேஸ் ரேட் அல்லது external benchmark விகிதத்திற்குக் கடனை மாற்ற மக்களுக்கு வாய்ப்பு உள்ளது.
வைப்பு நிதி
ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைக் குறைக்காத காரணத்தால் வைப்பு நிதிக்கான வட்டியில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இதனால் வைப்பு நிதி வைத்துள்ளவர்களுக்கு எவ்விதமான வருமான பாதிப்பும் இல்லை.
வர்த்தகச் சந்தை
இந்தப் பண்டிகை காலத்தில் ரெப்போ விகிதத்தைக் குறைக்காத காரணத்தால் வர்த்தகச் சந்தை சற்று ஏமாற்றம் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இதேவேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வந்துள்ள நிலையில் ரெப்போ விகிதத்தை உயர்த்தாமல் இருந்ததும் பல வகையில் நன்மையாகப் பார்க்கப்படுகிறது.