8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வருவது தாமதமாகிறதா? – காரணம் என்ன?

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைப்பது தொடர்பான 8ஆவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், சம்பள கமிஷன் நியமித்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது 7ஆவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியுடன் இதன் காலம் முடிவடைகிறது. எனவே 2026 ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட வேண்டும்.

8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வருவது தாமதமாகிறதா? – காரணம் என்ன?

8ஆவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரியில் தான் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரையை வழங்கி அது நடைமுறைக்கு வருவதற்கு 2027 ஆம் ஆண்டு வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்தே தங்களுடைய சம்பளமும் ஓய்வூதிய தொகையும் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மத்திய அரசினை பொறுத்தவரை சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மட்டுமே இதுவரை வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக இவ்வாறு சம்பள கமிஷன் அமைத்து அதற்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் துறை சம்பந்தப்பட்ட பலருடன் பேச்சு வார்த்தை நடத்தி அதன் அடிப்படையிலும் பண வீக்கத்தின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தி தங்களுடைய பரிந்துரைகளை வழங்குவதற்கு 15 லிருந்து 18 மாதங்கள் வரை எடுத்துக் கொள்வார்கள்.

2025 ஜனவரியில் தான் சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை வெளியாகி உள்ளது. அதற்கான உறுப்பினர்கள் குறித்த விவரங்களை கூட அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் தான் 8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவது தாமதமாகும் என\ சொல்லப்படுகிறது. சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்கினாலும் அரசு தரப்பில் அது ஆய்வு செய்யப்பட்டு பின்னர் தான் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

எனவே தான் 2027 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்துதான் 8ஆவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓராண்டு காலம் தாமதமானாலும் அந்த அரியர் தொகையானது ஊழியர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் . 8ஆவது சம்பள கமிஷனுக்கான டெர்ம்ஸ் ஆப் ரெஃபரன்ஸ் எனப்படும் வரையறை நியதிகளை அரசு அடுத்த மாதம் தான் அறிவிக்க இருக்கிறது.

மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் தந்த பிறகு வரையறை நியதிகள் வெளியிடப்பட்டு உறுப்பினர்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும். பின்னர் அவர்கள் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை வழங்குவார்கள். மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் , சம்பள கமிஷன் இத்தனை காலத்திற்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்ற எந்த காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என தெரிவித்திருந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அமைப்பான JCM வரையறை நியதிகளுக்கான தன்னுடைய பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறது. இதன்படி ஊழியர்களின் சம்பள கட்டமைப்பிலேயே பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அலோவென்ஸுகள் மற்றும் பிற பலன்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக pay scaleகளை ஒருங்கிணைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான சம்பள நடைமுறை எளிமையாக்கப்படும் என கூறியுள்ளனர்.

மத்திய அரசு இது தொடர்பாக நிதி அமைச்சகம், பாதுகாப்பு துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர் துறையிடம் கருத்துக்களை கேட்டுள்ளது. பணியாளர் துறை, அரசு ஊழியர்களின் கூட்டமைப்பிடம் இது தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும் படி கேட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 8ஆவது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

8ஆவது சம்பள கமிஷன் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஊதிய குழுவில் Fitment Factor எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட போகிறது, ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை நிர்ணயம் செய்யும்போது என்னென்ன அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட இருக்கின்றன என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

7ஆவது சம்பள கமிஷன் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை ஃபிட்மன்ட் ஃபேக்டர் 2.57 என்ற அளவீட்டில் கணக்கீடு செய்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 2 ,25, 000 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த நிலையில் 8ஆவது சம்பள கமிஷன் ஃபிட்மன்ட் ஃபேக்டரை எவ்வளவாக கொண்டு சம்பளத்தை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஃபிட்மன்ட் ஃபேக்டர் 2.57 அல்லது அதற்கு மேல் கொண்டு கணக்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சம்பள கமிஷன் என்ன முடிவினை எடுக்க போகிறது என்பது விரைவில் தெரிய வரும். இதற்கிடையே ஊதிய குழுக்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை மட்டும் மறு ஆய்வு செய்வது கிடையாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு அலோவென்ஸுகள் மற்றும் பிற வசதிகளையும் இது ஆய்வு செய்து மாற்றி அமைக்கிறது. இந்த நிலையில் 8ஆவது சம்பள கமிஷன் பழைய மற்றும் தேவையில்லாத சில அலோவென்ஸூகளை நீக்கிவிட்டு தேவைப்பட்டால் புதிய சில அலோவென்ஸுகளை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக 7ஆவது சம்பள கமிஷனும் இதுபோல பல்வேறு அலோவென்ஸுகளை நீக்கியது. 7ஆவது சம்பள கமிஷன் 196 அலோவென்ஸுகளை ஆய்வு செய்தது, அதில் 95 அலோவென்ஸுகளை மட்டுமே வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை நீக்கியது. 8ஆவது சம்பள கமிஷனிலும் இது போல சில அலோவென்ஸுகளை நீக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் உறுப்பினர்களை நியமனம் செய்து ஆலோசனை நடத்தி அவர்கள் பரிந்துரைகளை வழங்க ஓராண்டுக்கும் மேல் ஆகும். இதற்கு முந்தைய சம்பள கமிஷன்களும் ஓராண்டுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டன என்பதால் 8ஆவது சம்பள கமிஷனும் பரிந்துரைகளை வழங்க ஓராண்டுக்கு மேல் எடுத்து கொள்ளும் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+