எஸ்பிஐ நடத்திய 7-வது வங்கி மற்றும் பொருளாதார கூட்டத்தில், மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டு பேசினார். அதில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்களின் நிர்வாகம், திறன் மேலாண்மை போன்றவைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருந்தார். அதோடு கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர் கொள்ள மூலதனத்தையும் திரட்டிக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.
பொருளாதாரத்தில் கடன் கொடுக்க மட்டும் இன்றி, நிதி அமைப்பின் தாக்குபிடிக்கும் தன்மையைக் கொண்டு வரவும் முதலீடுகளைத் திரட்டிக் கொள்வது தற்போது மிகவும் அவசியமாகிறது எனச் சொல்லி இருக்கிறார்.
சமீபத்தில், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், தங்களின் பேலன்ஷீட்களை COVID stress tests-க்கு உட்படுத்தச் சொன்னது ஆர்பிஐ. இதன் மூலம் வங்கியின் லிக்விடிட்டி, சொத்துக்களின் தரம், லாபம், அடுத்தடுத்த நிதி ஆண்டுகளுக்குத் தேவையான முதலீடுகள் எல்லாம் இருக்கிறதா என பரிசோதித்துக் கொள்ளச் சொன்னது ஆர்பிஐ.
பல வங்கிகளும் இந்த சோதனைகளை முடித்துவிட்டார்கள். இப்போது, கொரோனாவால் ஏற்பட இருக்கும் தாக்கத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ. capital planning, capital raising and contingency liquidity planning போன்ற நடவடிக்கைகள் இதில் அடக்கம்.
பல தனியார் வங்கிகள் ஏற்கனவே தேவையான முதலீடுகளைத் திரட்டி இருக்கிறார்கள் அல்லது திரட்ட இருக்கிறார்கள். அரசு வங்கிகளோ, அரசாங்கம் முதலீடுகளைக் கொடுக்கும் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தற்போது ஆர்பிஐ ஆளுநர் வெளியிட்டு இருக்கும் தரவுகள் படி, வங்கி சொத்துக்களின் தரம் கொஞ்சம் தேறி இருக்கிறது. கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் தோராய என்பிஏ மதிப்பு 8.3 %-மாகவும், நிகர என்பிஏ மதிப்பு 2.2 %-மாகவும் இருக்கிறது. 2018 - 19-ல் தோராய என்பிஏ 9.1%-மாகவும், நிகர என்பிஏ 3.7%-மாகவும் இருந்தது.
2019 - 20 நிதி ஆண்டில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் தோராய என்பிஏ 6.4 சதவிகிதமாகவும், நிகர என்பிஏ 3.2%-மாகவும் அதிகரித்து இருக்கிறதாம். 6 மாத கடன் ஒத்திவைப்பு செய்து இருக்கிறார்கள் இல்லையா. அதனால், இந்த எண்கள், 2020 - 21 நிதி ஆண்டில் கணிசமாக மாறலாம் என்கிறார்கள். அதோடு கொரோனாவால் வியாபாரமும் மந்தமாகத் தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் விட, இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 2020 - 21 நிதி ஆண்டில் ஒரு சரிவைக் காணப் போகிறது. இது நம் பொருளாதார அமைப்பில் இருக்கும் அழுத்தத்தை பல மடங்கு அதிகரித்துவிடும்.
லாக் டவுன் தளர்வுக்குப் பின், இந்தியப் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டி இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய பின், மிகவும் கவனமாக சரியான பாதையில் செல்ல வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே ஆர்பிஐ கேஷ் ரிசர்வ் ரேஷியோவைக் குறைத்தது, லிக்விடிட்டி ரேஷியோக்களைக் குறைத்தது என பல தளர்வுகளை வங்கிகளுக்கு கொடுத்து இருக்கிறது ஆர்பிஐ. அவை எல்லாம் இதுவரை பலனளித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர். அதோடு "இந்த நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. அது மேலும் நிதி அமைப்புகளுக்கு உதவ, பல நடவடிக்கைகளை எடுக்க, எங்களை ஊக்கப்படுத்துகிறது" என்றும் சொல்லி இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 2019-ல் இருந்து கொரோனா வருவதற்கு முன்பு வரை, ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 1.35 % வரை குறைத்தது. அப்போது இந்தியாவின் பொருளாதார மந்த நிலையைப் போக்க ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைத்தது. கொரோனா வந்த பின் உடனடியாக 1.15 % வட்டி விகிதத்தை குறைத்தது. ஆக மொத்தம் 2.5 % வட்டியைக் குறைத்து இருக்கிறது. தற்போது ஆர்பிஐயின் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதம்.
ஆர்பிஐ இதுவரை 9.57 கோடி ரூபாயை பணப் புழக்கத்தை மேம்படுத்த பொருளாதாரத்தில் உட் செலுத்தி இருக்கிறது. இது ஒட்டு மொத்த இந்தியாவின் நாமினல் ஜிடிபியில் 4.7 சதவிகிதம் எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.