இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட உள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் முதல் சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
2021ஆம் ஆண்டின் கடைசி இருமாத நாணய கொள்கை என்பதாலும், சீனா தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள காரணத்தால் இந்தியாவிலும் வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது, ஆனால் இதற்கு வாய்ப்புகள் குறைவு என்பது தான் உண்மை.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கியின் கடந்த நாணய கொள்கை கூட்டத்தின் படி ரெப்போ விகிதம் 4 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது. இன்றை நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தவில்லை என்றாலும் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளது.
நாணய கொள்கை கூட்டம்
ரிசர்வ் வங்கி கடந்த 8 இருமாத கொள்கை கூட்டத்தில் எவ்விதமான வட்டி மாற்றங்களையும் செய்யாமல் தொடர்ந்து ஓரே நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது இன்று ரெப்போ விகிதத்தைக் குறைத்தாலோ அல்லது வர்ஸ் ரெப்போ விகிதத்தை உயர்த்தினாலோ பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த வேலையில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்க மே 2020ல் கடைசியாக ரிசர்வ் வங்கி தனது வட்டியை மாற்றியது. இன்றைய கூட்டத்தின் முடிவில் வட்டியை உயர்த்தவில்லை எனில் 9 இருமாத கூட்டத்தில் எவ்விதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி அறிவிக்காமல் இருக்கும்.
பணவீக்கம்
இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்த வாய்ப்பு உண்டு எனக் கணிக்கப்பட்டாலும், ரிசர்வ் வங்கியின் இலக்கான 2-6 சதவீத பணவீக்க அளவில் தான் இன்றளவும் இருக்கிறது.
காய்கறி மீதான பணவீக்கம் தற்காலிகமானது எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் வட்டியை உயர்த்த வாய்ப்புகள் குறைவு தான்.
பொருளாதார வளர்ச்சி
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 8.4 சதவீதமாக உள்ள நிலையில் ஒமிக்ரான் வைரஸ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பெரும் தடையாக இருக்கிறது. இதனால் ரிசர்வ் வங்கியின் பொருளாதார வளர்ச்சி இலக்கான 9.5 சதவீதம் அளவீடு சரிய வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
கணிப்பு
தற்போது சந்தை கணிப்புகளின் படி ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றம் இருக்காது என்று, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பெரும் பிரச்சனையாக இருக்கும் காரணத்தால் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது.