உலகின் டாப் 10 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்கிறது, என செய்திகள் வெளியாயின.
இது மோசமான செய்தி தான். இன்று மத்திய ரிசர்வ் வங்கி, வாராக் கடன் குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
ஆர்பிஐ கணிப்பு
ஆர்பிஐ கணக்குப் படி, கடந்த 2017 - 18 நிதி ஆண்டில், இந்திய வங்கிகளின் தோராய வாராக் கடன் (Gross NPA) 11.2 சதவிகிதமாக இருந்ததாம். ஆனால் இந்த செப்டம்பர் 2019 கணக்குப் படி இந்தியாவின் வாராக் கடன் 9.1 சதவிகிதமாக குறைந்து இருப்பதாகச் சொல்லி, மத்திய அரசின் வயிற்றில் ஒரு லிட்டர் பால் வார்த்து இருக்கிறது.
நிகர வாராக் கடன்
தோராய வாராக் கடன் 9.1 சதவிகிதமாக இருக்கும் போது, நிகர வாராக் கடன் (Net NPA), செப்டம்பர் 2019 கணக்குப் படி 3.7 சதவிகிதமாக குறைந்து இருக்கிறதாம். இதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டின் கணக்குப் படிப் பார்த்தால் நிகர வாரக் கடன் 6 சதவிகிதமாக இருந்ததாம். எனவே குத்தாட்டம் போடாத குறையாக மகிழ்ச்சியில் மிதக்கிறது மத்திய அரசு.
7 ஆண்டுகள்
கடந்த ஏழு ஆண்டுகளாக (2012 முதல் 2018 வரை) தொடர்ந்து இந்திய வங்கிகளின் வாரா கடன் அதிகரித்துக் கொண்டே வந்ததாம். இப்போது தான் வாராக் கடன்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கிறதாம். தற்போது வாரா கடன்களைக் கிட்டத் தட்ட கண்டு பிடித்து (Recognition process) முடித்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
எல்லா புகழும் வங்கிகளுக்கே
அரசு வங்கிகளின், சொத்தின் தரம் அதிகரித்ததனால் தான் தோராய வாராக் கடன்கள் மற்றும் நிகர வாரா கடன்கள் கணிசமாக குறைந்ததாம். அதோடு புதிய வாராக் கடன்கள் வருவதும் கணிசமாக குறைந்து இருக்கிறதாம். இதற்கு முந்தைய ஆண்டு வரை, வாராக் கடன்களாகச் பிரித்து வைத்தவைகள் குறைந்ததும், தற்போதைய மொத்த வாரா கடன்கள் குறைந்ததற்கு முக்கிய காரணம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
நாம் தான் நம்பர் 1
இப்போது உலகின் டாப் 10 பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில், அதிக வாரா கடன் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நாம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபக்கம் இந்த எச்சரிக்கையை கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை. இதற்கும் அரசு ஒரு வழி செய்ய வேண்டும்.