டெல்லி: நாட்டில் ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தாலும், மறுபுறம் சரிந்துள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் வெளியான பட்ஜெட் 2021 அறிக்கையிலும், பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்கான பல அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இதற்கிடையில் இன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வழக்கம்போல ரெப்போ விகிதம் 4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும் தொடரும் என்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதற்காக பணத்தினை இன்னொரு வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தினை டெபாசிட் ஆக பெறுகின்றன. அதற்கு அந்த வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் வழங்கப்படும். ஆனால் வங்கிகள் கடன் வழங்குவதற்கு இந்த டெபாசிட் தொகை மட்டுமே போதுமானதாக இருக்காது. இதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன்களை பெறுகின்றன. இது நீண்டகால கடன், குறுகிய கால கடன் என்று பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து ஒரு வட்டியை வசூலிக்கிறது. இதில் குறுகிய காலகடன்களுக்கு வசூலிக்கும் வட்டியே ரெப்போ விகிதம் ஆகும். இதே நீண்ட கால கடங்களுக்கு வசூலிக்கும் வட்டிக்கு பேங்க் ரேட் எனப்படும்.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி
ரெப்போ வட்டி தெரியும், அதென்ன ரிவர்ஸ் ரெப்போ வட்டி? ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளிடம் இருந்து பெறும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகும்.
ஆக ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் போது வங்கிகளும் கடன்களுக்கு வட்டியை குறைக்கின்றன. வட்டியை அதிகரிக்கும்போது வங்கிகளும் வட்டியை அதிகரிக்கின்றன.
கடந்த முறையும் மாற்றமில்லை
கடந்த டிசம்பர் அமர்விலும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யபப்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இன்று நடந்த கூட்டத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்
கடந்த முறையே மக்கள் அவதிப்படக்கூடாது என்கிற எண்ணத்தில், குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், ஆர்பிஐ தான் ரெப்போ விகிதத்தினை 4 சதவீதமாக குறைத்திருந்தது. கடந்த மார்ச் 2020ல் 0.75% வட்டி விகிதத்தினையும், மே மாதத்தில் 0.40% வட்டியினை குறைந்த நிலையில், இந்த முறையும் வட்டி குறைப்பில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சிபிஐ விகிதம்
இதற்கிடையில் CPI விகிதம் 2022ம் நிதியாண்டில் 5.2 - 5.0% ஆக இருக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. இதே 2021ம் நிதியாண்டில் இந்த விகிதம் 5.2% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. அதே போல 2022ம் நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 10.5% ஆக வளர்ச்சி காணும் என்றும் மதிப்பிட்டுள்ளது.