இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 1 ஆம் தேதி தனது முதல் டிஜிட்டல் ரூபாயின் (e₹) சோதனை திட்டத்தைச் செய்தது. இந்தச் சோதனை திட்டத்தில் மொத்த விற்பனை சந்தையில் பயன்படுத்தும் டிஜிட்டல் ரூபாயை (e₹-W) சோதனை செய்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி மக்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த Central Bank Digital Currency (CBDC) அமைப்பின் ரீடைல் வர்த்தகச் சந்தையில் பயன்படுத்தும் டிஜிட்டல் ரூபாயின் சோதனை டிசம்பர் 1 ஆம் தேதி செய்ய உள்ளது.
ரீடைல் டிஜிட்டல் ரூபாய் என்பது பொதுமக்களாகிய நாம் பயன்படுத்துவது என்பதால் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன..?
தற்போது மக்கள் பயன்படுத்தி வரும் ரூபாயின் டிஜிட்டல் அவதாரம் தான் இந்த டிஜிட்டல் ரூபாய், இது பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளதால் பணம் யாரிடம், எவ்வளவு இருக்கிறது, எங்கிருந்து வந்தது, எங்குச் செல்கிறது என அனைத்தையும் டிஜிட்டல் லெட்ஜர் வசதிகள் உடன் கண்காணிக்க முடியும்.
ரீடைல் டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன..?
ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான Central Bank Digital Currency (CBDC) அமைப்பு தான் டிஜிட்டல் ரூபாயை உருவாக்கியது. இந்த அமைப்பு மொத்த விற்பனை சந்தையில் பயன்படுத்த e₹-W என்பதையும், ரீடைல் சந்தையில் பயன்படுத்த e₹-R என்பதையும் உருவாக்கியுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி ஆர்பிஐ சோதனை செய்யப்போவது e₹-R அதாவது ரீடைல் டிஜிட்டல் ரூபாய் இதைப் பொதுமக்கள், வணிகங்கள், நிதியியல் அல்லாத வாடிக்கையாளர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடியது.
ரீடைல் டிஜிட்டல் ரூபாய் எப்படி இயங்கும்..?
ரீடைல் டிஜிட்டல் ரூபாய் e₹-R என்பது ஒரு டோக்கன் போல, தற்போது நாம் பயன்படுத்தும் 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 2000 ரூபாய் மற்றும் நாணய மதிப்பீட்டில் டோக்கன் உருவாக்கப்பட்டு அதை வங்கிகளின் வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்படும். மக்கள் இந்தப் பரிமாற்றத்தை வங்கிகள் அளிக்கும் டிஜிட்டவ் வேலெட் வாயிலாகச் செலுத்தவும், பெறவும் முடியும். மேலும் இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பேமெண்ட்-ஐ தற்போது UPI சேவை போல் QR கோடு வாயிலாக எளிதாகச் செய்ய முடியும்.
ரீடைல் டிஜிட்டல் ரூபாயை பெறுவது எப்படி..?
உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலெட்-க்கு மாறுவதன் மூலம் நீங்கள் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும். இதேபோல் டிஜிட்டல் ரூபாயை பொதுவாகப் பயன்படுத்தும் கணக்கிற்கு மாற்றப்படும் போது சாதாரண ரூபாய் கிடைக்கும். டிஜிட்டல் ரூபாயை வைத்திருப்பதால் எவ்விதமான வட்டியும் கிடைக்காது.
டிஜிட்டல் ரூபாய் பயன் என்ன..?
டிஜிட்டல் ரூபாய் மூலம் பணத்தை அச்சிடுவது முதல், பணத்தை நிர்வாகம் செய்வது வரையில் அனைத்து விஷயத்திலும் செலவுகளைச் சேமிக்க முடியும். இதேபோல் டிஜிட்டல் ரூபாய் மூலம் நிதியியல் சேவை நம்பிக்கையின்மை அதிகரிக்கும். இதேபோல் செட்டில்மென்ட் சிஸ்டத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த முடியும், குறிப்பாக நாடுகள் மத்தியிலான பேமெண்ட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதேபோல் cross-border paymentல் இருக்கும் பொதுவான ஆபத்துகள் குறையும்.
அரசுக்கு என்ன பலன்..?
டிஜிட்டல் ரூபாய் மூலம் பணச் சலவை, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், வரி ஏய்ப்பு போன்ற அரசுக்கு தலைவலி கொடுக்கும் அனைத்தும் தீர்க்க முடியும்.
கிரிப்டோகரன்சி
இந்த டிஜிட்டல் ரூபாய் மூலம் பிட்காயின், எதிரியம் போன்ற விரச்சுவல் கரன்சியில் இருக்கும் அனைத்து பலன்களும் இந்த டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் கரன்சியில் உள்ளது. ஆனால் இது மொத்தமும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் நம்பிக்கைதன்மை அதிகமாக உள்ளது.
ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனை
டிசம்பர் 1 ஆம் தேதி நடக்கும் ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனை திட்டத்தில் குறிப்பிட்ட நகரத்தில், வாடிக்கையாளர் - விற்பனையாளர்கள் அடங்கிய சிறிய வட்டத்திற்குள் இதைப் பயன்படுத்திச் சோதனை செய்யப்பட உள்ளது.
மும்பை, டெல்லி, பெங்களூர்
இந்தச் சோதனை திட்டத்தில் Retail Digital Rupee (e₹-R) மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி ஆகிய 4 முக்கிய வங்கிகள் மத்தியில் இயங்க சோதனை செய்யப்பட உள்ளது.
விரிவாக்கம்
இந்தச் சோதனையின் வெற்றியை தொடர்ந்து Retail Digital Rupee சோதனையை அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
4 வங்கிகள்
மேலும் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே அறிவித்த 4 வங்கிகளுடன் பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் சேர்க்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.