மார்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்தியாவில் உணவுப் பொருட்கள் முதல் உற்பத்தி பொருட்கள் வரையில் அனைத்தின் விலையும் உயர்ந்தது.
குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயர்ந்த காரணத்தால் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 5.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரீடைல் பணவீக்கம் உயர்வு
அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி பிப்ரவரி மாதம் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான ரீடைல் பணவீக்கம் பிப்ரவரி மாதம் 5.03 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5.52 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலை
ரீடைல் பணவீக்கத்தில் உணவுப் பொருட்கள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் காரணத்தால் மார்ச் மாதம் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
முக்கியக் காரணம்
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் படி உணவு பணவீக்கம் பிப்ரவரி மாதம் 3.87 சதவீதமாக இருந்த நிலையில், இது மார்ச் மாதம் 4.94 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் உயர முக்கியக் காரணமாக விளங்கும் எரிபொருள் மற்றும் மின்சாரம் பிரிவு பணவீக்கம் 3.53 சதவீதத்தில் இருந்து 4.94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆர்பிஐ பணவீக்க கணிப்புகள்
சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை மறுசீரமைப்புச் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. இதன் படி ஜனவரி - மார்ச் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் ரீடைல் பணவீக்கம் 5 சதவீதமாகவும், 2021-22 நிதியாண்டின் முதல் 2 காலாண்டில் 5.2 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
2020 பணவீக்க அளவீடுகள்
ரிசர்வ் வங்கியின் பணவீக்க அளவீட்டில் அதிகப்படியாக 6 சதவீத அளவீட்டை ஜூன் - நவம்பர் 2020 வரையில் தொடர்ந்து தாண்டிய நிலையில், டிசம்பர் மாதம் இதன் அளவீடு குறைந்தது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் இருந்து இதன் அளவீடு மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இம்மாதத்தில் ரீடைல் பணவீக்கம் அதிகளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்துறை உற்பத்தி அளவீடு
இதேபோல் பிப்ரவரி மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி அளவீடு பிப்ரவரி மாதம் 3.6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இக்காலகட்டத்தில் உற்பத்தி துறை 3.7 சதவீதமும், சுரங்க துறை 5.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.