அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை மிரட்டி வரும் பணவீக்கம் தற்போது இந்தியாவையும் விரட்டத் துவங்கியுள்ளது, பல மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கை காட்டிலும் ரீடைல் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் நிலையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் இந்திய பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் முக்கியப் பணிகளில் இருக்கும் தொழிலாளர்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக கோவை, சேலம் சந்தைகள் இந்த பணவீக்கத்தால் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது என்பது கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது.
தொழிற்துறை ஊழியர்கள்
இந்திய தொழிற்துறை ஊழியர்களுக்கான ரீடைல் பணவீக்கம் ஏப்ரல் மாதம் 6.33 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதம் இதன் அளவீடு 6.97 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு அடிப்படையான காரணம் உணவு பொருட்களில் ஏற்பட்ட உயர்வு தான் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.
பணவீக்கம்
2021 மே மாதத்தில் 5.25 சதவீதமாக இருந்த தொழிற்துறை ஊழியர்களுக்கான பணவீக்கம், இந்த ஆண்டு 6.97 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத முந்தைய மாதத்தில் 5.25 சதவீதமாக இருந்தது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உணவு பணவீக்கம்
இக்காலக்கட்டத்தில் உணவு பணவீக்கம் 7.92 சதவீதமாக அதிகரித்துள்ளது தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக அனைத்திந்திய CPI-IW விகிதம் மே மாதத்திற்கு 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
முக்கிய உணவு பொருட்கள்
மே மாதம் தக்காளி, வெங்காயம், பாகற்காய், எலுமிச்சை, மாம்பழம், தர்பூசணி, வெற்றிலை, பெட்ரோல், உருளைக்கிழங்கு, சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், எருமைப்பால், மீன், கோழிக்கறி, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், பேருந்துக் கட்டணம், அலோபதி மருந்துகள், தொலைப்பேசி கட்டணம் உள்ளிட்ட அனைத்து குறியீட்டு எண் உயர்வுக்குக் காரணமாகும்.
கோவை, சேலம்
கோயமுத்தூரில் CPI-IW விகிதம் இந்தியாவிலேயே அதிகப்படியாக 5.2 புள்ளிகளும், சேலத்தில் 4.8 புள்ளிகளும், ஜலந்தரில் 4.2 புள்ளிகளும் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து 6 சென்டர்களில் 3 முதல் 3.9 புள்ளிகளும், 19 சென்டர்களில் 2 முதல் 2.9 புள்ளிகளும், 22 சென்டர்களில் 1 முதல் 1.9 புள்ளிகளும், 24 சென்டர்களில் 0.1 முதல் 0.9 புள்ளிகளாகவும் உள்ளது.
யமுனாநகர்
இதேவேளையில் யமுனாநகரில் அதிகப்படியாக CPI-IW விகிதம் 1.5 புள்ளிகள் குறைந்துள்ளது, இதைத் தொடர்ந்து டெல்லியில் 1.2 புள்ளிகள் குறைந்துள்ளது, மற்ற 9 சென்டர்களில் 0.1 முதல் 0.9 புள்ளிகள் குறைந்துள்ளது, 3 சென்டரில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டன் அளவை போலவே உள்ளது.
317 சந்தைகள் தரவுகள்
நாட்டிலுள்ள 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் 317 சந்தைகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் சேகரிக்கப்படும் சில்லறை விலைகளின் அடிப்படையில் தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-IW விகிதம்) கணக்கிட்டு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிடுகிறது. இந்த 317 சந்தைகளின் சராசரி அளவீடு தான் 1.3 புள்ளிகள், இதன் உயர்வின் மூலமே மே மாதம் 129 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.