டெல்லி: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவு பொருட்கள் விலை உயர்வினால் கடந்த அக்டோபர் மாத சில்லறை பணவீக்கமும் அதிகரித்துள்ளது.
சில்லறை பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 4.62 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இது ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்த 4 சதவிகிதத்தை விட அதிகமாகும்.
எனினும் முக்கிய பணவீக்க விகிதமான எரிபொருள் விகிதம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 3.3 சதவிகிதமாக இருந்தது.
அதிகரித்து வரும் உணவுப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நாட்டில் காய்கறிகளின் விலை மற்றும் பருப்பு வகைகள் அதிகளவு விலை உயர்ந்து விட்டதையே காண்பிக்கிறது.
நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 3.99 சதவிகிதமாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே செப்டம்பரில் 3.38 சதவிகிதம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே உணவு பணவீக்கமானது 39 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 7.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதில் காய்கறிகள் 26 சதவிகித ஏற்றமும், பருப்பு வகைகள் 11.7 சதவிகிதமும் பங்களித்துள்ளன. இந்த உணவு பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 5.11 சதவிகிதமாக இருந்தது கவனிக்கதக்கது.
இதுவே நகர் புறங்களில் பணவீக்கமானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 10.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.76 சதவிகிதமாக இருந்தது.
கடந்த அக்டோபரில் நகர்புற பகுதிகளில் பணவீக்க விகிதம் 5.11 சதவிகிதமாக அதிகரித்துள்ள நிலையில், இது கடந்த செப்டம்பரில் 4.78 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உணவு பணவீக்கம் குறைந்தது அடுத்த ஆண்டு மார்ச் வரையிலாவது அதிகரிக்கும் என்று இந்தியா ரேட்டிங்க்ஸ் ஆய்வு நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தேவேந்திர பந்த் கூறியுள்ளார்.
இதே ஒட்டுமொத்த நுகர்வோர் பணவீக்கமும் மீதமுள்ள நிதியாண்டில் 4 சதவிகிதத்தை விட அதிகமாக இருக்கலாம். இது பொருளாதார மந்த நிலையின் வளர்ச்சி வேகத்தில் சிக்கலை உண்டாக்குகிறது என்று ஐ.ஆர்.சி.ஏவின் முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறியுள்ளார்.