இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக உணவுப் பொருட்கள் முதல் ஆட்டோமொபைல் பொருட்கள் வரையில் அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக மார்ச் மாதத்தில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 4 மாத உயர்வை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் 5 மாநில தேர்தல் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் மாற்றம் இல்லை என்றாலும் பிப்ரவரி மாதமே இந்தியாவில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக் கடந்து வர்த்தகச் சந்தையில் போதுமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில் மார்ச் மாதத்தில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 5.40 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் இது 5.03 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கப்பட்ட பணவீக்க அளவீட்டிற்குள் இருக்கும் காரணத்தால் மார்ச் மாதத்தில் ஏற்பட்டு உள்ள உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ரிசர்வ் வங்கி 2 முதல் 6 சதவீதம் அளவிற்குள் நாட்டின் பணவீக்கம் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது, இதேவேளையில் 2022ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தனது இலக்கை சமீபத்தில் உயர்த்தியது.
எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களில் ஏற்பட்டு உள்ள விலை உயர்வு ரீடைல் பணவீக்கம் உயர மிக முக்கியக் காரணமாக உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகவும் மோசமான நிலையை அடைந்து வருவது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.