மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி நவம்பர் மாதம் இந்தியாவின் ரீடைல் பணவீக்கத்தின் அளவு கணிசமாக உயர்ந்து 4.91 சதவீதமாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் கணக்கிடப்படும் ரீடைல் பணவீக்கம் அக்டோபர் மாதம் 4.48 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 4.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.
காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதன் விலையைப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி இலக்கு
இதனால் பழம், காய்கறி மீதான பணவீக்கம் அதிகரித்து ரீடைல் பணவீக்கத்தின் அளவு அக்டோபர் மாதத்தை விடவும் நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடந்த ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்தில் ரீடைல் பணவீக்கத்தின் அளவை 4 சதவீதமாக வைக்க வேண்டும் என்றும் 2 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ரிசர்வ் வங்கி
கடந்த 5 காலாண்டுகளாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்யப்பட்ட அளவில் ரீடைல் பணவீக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தில் புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வட்டி விகிதம், பணவீக்க அளவீடுகள் என எதையும் மாற்றாமல் பழைய அளவீட்டையே அறிவித்தார்.
ரீடைல் பணவீக்கம்
நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் 5.1 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை நவம்பர் மாதம் 16 சதவீதம் குறைந்து 76 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவும் ரீடைல் பணவீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கிற்குள் இருக்க மிக முக்கியமான காரணமாகும்.
ஜிடிபி கணிப்புகள்
ரிசர்வ் வங்கியின் பொருளாதார வளர்ச்சி அளவீடுகளில் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 6.6 சதவீதமும், 4வது காலாண்டில் 6.4 சதவீதமும், 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 17.2 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 7.8 சதவீதமாக வளர்ச்சி அடையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
CPI கணிப்புகள்
இதேபோல் சில்லறை விலை பணவீக்கத்தில் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 5.1 சதவீதமும், 4வது காலாண்டில் 5.7 சதவீதமும், 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 5 சதவீதமாக வளர்ச்சி அடையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 4.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி முன்பு கணித்திருந்தது தற்போது இதன் அளவு உயர்ந்துள்ளது.