கொரோனா பாதிப்பைக் குறைக்க இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 21 நாள் லாக்டவுன் காலத்தில் இந்திய ரீடைல் சந்தை சுமார் 3.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது என அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா மிகப்பெரிய நுகர்வோர் சந்தை கொண்டிருக்கும் நிலையில் ரீடைல் சந்தை லாக்டவுன் காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நஷ்டத்தின் அளவு மிகப்பெரியதாக இருந்தாலும் வியாபாரிகளும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
CAIT அமைப்பு
லாக்டவுன் காலம் தற்போது மே 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரீடைல் சந்தை தொடர்ந்து பாதிப்பாக்கப்பட உள்ளது. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பணிகளைச் செய்வதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பு (CAIT) உறுதி அளித்துள்ளது.
7 கோடி வர்த்தகர்கள்
இந்தியாவில் மொத்தம் 7 கோடி வர்த்தகர்கள் இருக்கிறார்கள், இதில் 1.5 கோடி வர்த்தகர்கள் மட்டுமே மக்களின் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்கள்.
போக்குவரத்துப் பிரச்சனை, பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் அதிகாரிகளின் ஒப்புதல் ஆகிய நெருக்கடியின் மூலம் இந்த 1.5 கோடி வர்த்தகர்களில் வெறும் 40 லட்சம் வர்த்தகர்கள் மட்டுமே தற்போது இயங்கும் சூழ்நிலையில் உள்ளது.
80 சதவீத ஊழியர்கள்
மேலும் வர்த்தகர்களிடம் பணியாற்றும் 80 சதவீத ஊழியர்கள் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், 20 சதவீத ஊழியர்கள் மட்டுமே தற்போது வர்த்தகர்களுக்கு உதவியாகப் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் பல லட்ச கடைகள் இயங்க முடியாமல் முடங்கியுள்ளது.
3.15 லட்சம் கோடி ரூபாய்
இப்படிப் பல்வேறு இக்காட்டான சூழ்நிலையில் நாட்டின் 90 சதவீத ரீடைல் வர்த்தகம் முடங்கிக்கிடக்கிறது. இந்நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட 21 நாள் காலத்தில் மட்டும் சுமார் 3.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என CAIT அமைப்பின் தேசிய தலைவர் பிசி பார்தியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்திய பொருளாதாரம்
இதேபோல் இந்த லாக்டவுன் காலத்தில் தினமும் 35,000 கோடி ரூபாய் அளவிலான பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொள்ளும் எனக் கணித்திருந்தது. இதனால் 21 நாள் முடிவில் இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த லாக்டவுன் காலத்தில் போக்குவரத்து, ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகிறது.