தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் முடிகின்றன. விஜய் தலைமையிலான அரசு முந்தைய ஆட்சிகளில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அப்படியே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகங்களுக்கு உயிர் கொடுத்தது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. குறைந்த விலையில் காலை, மதியம், இரவு உணவுகள் விற்கப்பட்டன. 1 ரூபாய்க்கே உணவுகள் கிடைத்ததால் ஏழை எளிய மக்கள் பலருக்கும் முக்கிய உணவு ஆதாரமாக அம்மா உணவகங்கள் அமைந்தன. இட்லி, பொங்கல், கலவை சாதம், சப்பாத்தி என மூன்று நேரமும் குறைந்த விலையில் உணவு கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் மீது பெரிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் அரசு அமைந்தது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, அம்மா உணவகங்களுக்கு உயிர் கொடுத்து மீண்டும் பழையபடி செயல்பட வைத்தது. இதன் விளைவாக தற்போது நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு மேல் அம்மா உணவகங்களில் வந்து உணவு உண்ண தொடங்கியுள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் காரணமாக, இங்கு வந்து உணவு அருந்தும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை, அம்மா உணவகங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை சராசரியாக 67,000 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 31.23 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சராசரியாக, தினமும் 1.04 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் பசியை போக்கியுள்ளனர், இதன் மூலம் தினசரி சராசரி வருவாய் ரூ.4.53 லட்சமாக உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான சமையல் உபகரணங்களை வாங்கவும், சுகாதாரமான மற்றும் தரமான உணவை மக்களுக்கு தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுத்ததே இதற்கு முக்கிய காரணம்.
சென்னையில் உள்ள 383 அம்மா உணவகங்களில் பெரிய அளவிலான புதுப்பித்தல் பணிகள் நடந்து அதற்காக 17.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மூத்த அதிகாரிகள் களத்தில் நேரடியாக ஆய்வு செய்து உணவு தரத்தை உறுதி செய்ததும் அம்மா உணவகங்களை நோக்கி மக்கள் வருகை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது என சொல்லப்படுகிறது.
வழக்கமாக புது அரசு அமைந்தால் பழைய அரசின் திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். ஆனால் விஜய் தலைமையிலான அரசு மக்கள் நல திட்டங்கள் தொடரும் என அறிவித்து அம்மா உணவகங்கள், மகளிர் உரிமை தொகை, தமிழ் புதல்வன் உள்ளிட்டவற்றை அப்படியே தொடர்ந்து வருகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என பலரும் பாராட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications

