அமெரிக்கா தேர்தலை விட மிக பரபரப்பாக பேசப்பட்டது அமெரிக்காவில் செய்யப்பட்ட பரப்புரைகள் தான். அதில் இந்திய மக்கள் மனதில் மிக ஆழமாக பதிந்தது, ஜோ பிடன் தான் ஆட்சிக்கு வந்தால், ஹெச் 1பி விசா தடையை நீக்குவேன் என்று கூறியது தான்.
அதுமட்டும் அல்ல, டிரம்பின் குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவேன் என்றும் பிடன் கூறியதும் இதில் அடங்கும்.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புகளை காக்கும் விதமாக, கடந்த ஜூன் 23ம் தேதியன்று ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை விதித்தார்.
ஐடி ஊழியர்கள் மனதில் குழப்பம்
உண்மையில் நடப்பு ஆண்டில் கொரோனாவை விட மிக அதிகமாக இந்திய ஐடி ஊழியர்களின் மனதினை பாதித்தது, அமெரிக்காவின் ஹெச் 1பி விசா முடக்கம் தான். ஏனெனில் இந்திய ஐடி ஊழியர்களின் முக்கிய கனவே அமெரிக்காவில் பணியாற்றுவது என்பது இருக்கும். ஆக இந்த தடை மீண்டும் எப்போது நீக்கப்படும்? விசா கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்வியும் அப்போது எழுந்தது.
யாருக்கு பாதிப்பு?
இந்த ஹெச் 1பி விசாவினால் அதிகம் அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களும் சீனர்களும் தான். இந்த தடையினால் மிக பாதிப்பு இந்திய ஊழியர்களுக்கு தான். அமெரிக்கா மக்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுத்ததாக கூறினாலும், இது ஐடி நிறுவனங்களுக்கும் சற்று பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
விசா குறித்தான நடவடிக்கை
இப்படி இரு நிலையில் தான் ஜனநாயக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அமெரிக்கா துணை அதிபருமான ஜோ பிடன், அப்போது அதிரடியான ஒரு அறிவிப்பினை கொடுத்தார். அது, தான் ஜெயித்தால் ஹெச் 1பி விசா மற்றும் மற்ற குடியேற்ற கொள்கைகளில் திருத்தம் கொண்டு வருவதாக கூறியது தான். இதன் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.
ஐடி ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம்
ஆக அந்த சமயத்தில் இது இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டது. இது குறித்து ஒரு அறிக்கையில், குடியேற்றக் கொள்கை என்பது ஒன்றாக வைத்திருப்பது. குடும்பங்களை ஒண்றினைத்தல் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் மூலம் குடியேற்ற முறையை நவீனமயமாக்குவது போன்றவற்றவற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளது என பிடன் கூறியிருந்தார்.
தடையை நீக்குவேன்
தற்போது கிட்டதட்ட 10 லட்சம் வெளி நாட்டவர்கள் தங்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். ஆனால் இன்னும் பலர் கீரின் கார்டு பெறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களால் அதிகம் விரும்பப்படும் ஹெச் 1பி விசாக்களுக்கான தற்காலிக விசாவினை இடைநீக்கம் செய்வேன் என பிடன் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
சில மாதங்களாகும்
இதற்கிடையில் தற்போது தனது அறிக்கையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் குடியேற்ற கொள்கைகளை திரும்ப பெற சில மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளார்.
கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே. பிடனின் ஆட்சியில் கொடுத்த வாக்குறுதியினை பின்பற்றி தளர்வுகள் அளிக்கப்படுமா? இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அது எப்போது கிடைக்கும் என்று.