இந்தியாவில் பருவமழை இயல்பை விட 11% அதிகமாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் விநியோகம் சீரற்றதாக உள்ளது மற்றும் இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்திக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள வேளையில் அரசி விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து உணவு பொருட்கள் விநியோக சங்கிலி தடைபெற்று அதிகளவிலான வர்த்தக நெருக்கடிகள் உருவானது. இதேவேளையில் பல நாடுகளில் பல காரணங்களுக்காக உணவுப் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் இந்தியாவில் அரிசி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
அரிசி விலை
ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அனைத்து அரிசி வகைகளின் விலைகளும் 30% வரை அதிகரித்துள்ளன. இதுதவிர பங்களாதேஷ், ஈரான், ஈராக் மற்றும் சவூதி அரேபியா நாடுகளில் அதிகப்படியான தேவை இருக்கும் வேளையில் பல மாநிலங்களில் நெல் சாகுபடி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
வரி உயர்வு
இந்திய மக்களின் பிரதான உணவாக விளங்கும் அரிசி விலையின் உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும், இதற்கிடையில் 15 கிலோ கீழ் எடை கொண்ட பிராண்டெட் உணவு பொருட்கள் அனைத்திற்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் காரணத்தால் விலை உயர்வுடன், வரி உயர்வும் பெரும் பாதிப்பை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
நெல் சாகுபடி
நெல் சாகுபடி செய்யும் முக்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் மோசமான மழை காரணமாக உற்பத்தி அளவுகள் குறைந்துள்ளது. காரீஃ பருவத்தில் ஜூலை 29 வரையிலான காலகட்டத்தில் நெல் உற்பத்தி அளவீட்டைக் கடந்த ஆண்டு உடன் ஒப்பிடுகையில் 13.3% குறைந்துள்ளது.
ஏற்றுமதி
இந்த நிலையில் இந்திய அரிசிக்கு வெளிநாட்டில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் அரிசி-க்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளது. இதனால் சோனா மசூரி அரிசி விலை 20 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
நடுத்தர மக்கள்
சமையல் எண்ணெய் விலை உயர்வில் இருந்து மக்கள் மீண்டு வந்த நிலையில் தற்போது அரிசி மீதான விலை மற்றும் வரி உயர்வு மக்களுக்குப் புதிய சுமையாக மாறியுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பருவமழை, சர்வதேச சந்தையில் நிலவும் டிமாண்ட் என அனைத்துமே முக்கியக் காரணமாக விளங்குகிறது.