பொதுவாகவே, இந்தியர்களுக்கு அமெரிக்கா சென்று செட்டில் ஆக வேண்டும் என்கிற ஆசை அதிகம் என்பார்கள்.
உதாரணமாக H-1B ரக விசாவை எடுத்துக் கொள்வோம். இதில் சுமாராக 72 சதவிகித விசாக்களை இந்தியர்கள் தான் பெறுகிறார்கள்.
இப்படி பல ரக விசாக்களை, அமெரிக்கா பல நாட்டு மக்களுக்கும் வழங்கி வருகிறது. இப்படி விசா எடுத்துக் கொண்டு அமெரிக்காவுக்குச் சென்று மெல்ல குடியுரிமைக்கு விண்ணப்பித்து அமெரிக்க குடிமகன் ஆக நினைப்பார்கள்.
ஜாக் பாட்
இப்போது, இந்த காதை சுத்தி மூக்கை தொடும் வேலை எல்லாம் தேவை இல்லை. நறுக்கென ஆறு மாத காலத்துக்குள், அமெரிக்க குடிமகன் ஆகிவிடலாம். இதில் இன்னொரு நல்ல விஷயம் என்ன என்றால், இந்த வழியாக விசா எடுத்து நிரந்தர குடியுரிமை பெற நினைப்பவர்கள் தங்கள் கணவன், மனைவி மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குள் வரலாமாம்.
க்ரேனடா
அதற்கு முன் க்ரேனடா நாட்டைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கரீபியன் கடலைப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். அந்த கடலின் தென் திசையில் க்ரெனடியன் தீவுகள் நிறைய இருக்கின்றன. அதில் க்ரெனடா தீவு மற்றும் இன்னும் ஆறு தீவுகள் சேர்ந்தது தான் க்ரேனடா நாடு. வெனிசுலா நாட்டுக்கு வட கிழக்கில் இந்த நாடு அமைந்து இருக்கிறது.
என்ன வழி
Grenada Citizenship by Investment programme என்பது தான் அந்த வழி. அதாவது க்ரேனடா என்கிற நாட்டில், நாம் முதலில் குடிமகன் ஆக வேண்டும். அதன் பின் அசால்டாக அமெரிக்காவில் குடிமகன் ஆகிவிடலாமாம். இப்போது இந்த திட்டம் இந்திய பணக்காரர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்.
க்ரேனடாவுக்கு என்ன செய்ய வேண்டும்
Grenada Citizenship by Investment programme-ன் கீழ், க்ரேனடா நாட்டில் 2,20,000 டாலரை (சுமாராக இந்திய மதிப்பில் 1.6 கோடி ரூபாய்), அரசு அனுமதி கொடுத்த ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அப்படியே க்ரேனடா நாட்டு குடிமகன் ஆகிவிடலாம்.
E2 Visa திட்டம்
க்ரேனடா நாட்டு குடிமக்கள், E2 Visa திட்டத்தின் வழியாக, அமெரிக்காவின் குடிமகன் ஆக விண்ணபித்து, மூன்றே மாதங்களில் அமெரிக்க குடிமகன் ஆகிவிடலாம். இந்த E2 Visa திட்டத்தின் வழியாக, ஒரு க்ரேனடா குடிமகன், குறைந்தபட்சமாக அமெரிக்காவில் 1.5 லட்சம் டாலர் முதலீடு செய்து, அமெரிக்காவில் வியாபாரம் செய்து வாழ அனுமதிக்கிறதாம்.
செலவு அதிகம்
இதற்கு முன் EB-5 விசா திட்டத்தை அதிகம் நம்பிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது EB-5 திட்டம் பயங்கர காஸ்ட்லி ஆகிவிட்டது. EB-5 விசா கட்டணம் 50,000 டாலர் அதிகரித்தது, செய்ய வேண்டிய முதலீட்டை 5 லட்சம் டாலரில் இருந்து 9 லட்சம் டாலராக அதிகரித்து என இந்த ரக விசா அதிகம் விலை உயர்ந்தது மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த ப்ராசஸ் நேரமும் அதிகம் எடுத்துக் கொண்டது.
90 + 90 நாட்கள் மட்டுமே
ஆனால் EB-5 திட்டத்துக்கு நேர் மாறாக E2 விசாவில் முதலீடு செய்ய வேண்டிய தொகை குறைவு. அதோடு 90 நாட்களில் க்ரேனடாவின் குடிமகன் ஆகிவிடலாம். அடுத்த 90 நாட்களில் விண்ணப்பித்து அமெரிக்க பிரஜை ஆகிவிடலாம். என்பதால் கடந்த சில மாதங்களாக, இந்த க்ரேனடா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
பணக்காரர்கள் மட்டுமே
க்ரேனடாவில் 2.2 லட்சம் டாலர் + அமெரிக்காவில் 1.5 லட்சம் டாலர் என்றால் மொத்தம் 3.7 லட்சம் டாலர் செலவழிக்க வேண்டும். இது இந்திய மதிப்பில் சுமாராக 2.65 கோடி ரூபாய் வரும். இவ்வளவு பணம் செலவழிக்க முடிந்தவர்கள் மட்டுமே, இந்த E2 விசா வழியாக அமெரிக்க குடிமகன் ஆக முயற்சிக்கலாம்.