இந்தியாவில் ஸ்மார்ட்போன் ஆதிக்கத்தினை செலுத்தி வரும் சீனாவிற்கு இது உண்மையில் ஒரு மோசமான செய்தியாகவே இருக்கும்.
ஏனெனில் இந்தியாவில் இன்னும் 5ஜி சேவை இல்லாவிட்டாலும், அதற்குண்டான செயல்பாடுகளை செய்து வைத்துள்ளதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. அதாவது 5ஜி சேவைக்கான தொழில் நுட்பங்களை தயாராக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கூகுள் மற்றும் ஜியோ கூட்டணியில் இணைந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான OSயினை உருவாக்கும் என்றும், தனது 43 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி
தான் தனிகாட்டு ராஜவாக இருக்கும்போதே கலக்கும் முகேஷ் அம்பானிக்கு, தற்போது கூகுள் என்னும் மிகப்பெரிய ஜாம்பவானுடன் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், இது நிச்சயம் இந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போன் புரட்சியை கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது இந்த இரு ஜாம்பவான்களும் இணைந்து 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்களுக்கான ஓ எஸ்களை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
விரைவில் 5ஜி சேவை
முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஜியோ 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கிறது. விரைவில் இதற்கான சோதனை துவங்கும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது ஜியோவின் மேட் இன் இந்தியா 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு இதன் சேவைகள் துவங்கும் எனவும் அம்பானி தெரிவித்துள்ளார்.
கூகுள் முதலீடு
டெக் ஜியாண்டான கூகுள் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின் 7.7 சதவீதம் பங்கின் மூலம், 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றும் பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூறியிருந்தார்.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோவில் பேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், அபுதாபியின் முபதாலா, சில்வர் லேக், பிஐஎஃப், இன்டெல் கேப்பிட்டல், குவால்காம் வென்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் வடிவமைப்பு
நாட்டில் பல அம்சங்களைக் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. எனினும் நாங்கள் சிறந்த 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை வடிவமைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு இந்தியரின் கையிலும் ஒரு ஸ்மார்ட்போனினை வைக்கும் தேசிய பணியை துரிதப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உலகின் முதல் 4ஜி ஸ்மார்ட்போன்களில் ஜியோவும் ஒன்றாகும் எனவும் அம்பானி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
சீனா ஐரோப்பிய நிறுவனங்களை நம்ப தேவையில்லை
இது ஆரம்பிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் நூறு மில்லியன் பயனர்களைக் எட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா தனது 5ஜி தொழில்நுட்பங்களை சொந்தமாகக் கொண்டிருக்க முடியும். இதற்காக சீனா அல்லது ஐரோப்பிய நிறுவனங்களின் உதவியை நம்பாமல் இருக்க முடியும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.
தரவு பாதுகாப்பு
5ஜி சேவை தொழில்நுட்பத்தில் சீனா முன்னிலை வகிக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு தேவையான 5ஜி தொழில் நுட்பங்களைக் கொண்டு இருக்கும் போது, அதன் மூலம் பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்புகளை மேற்கொள்ள முடியும். 5ஜி என்பது அடுத்த தலைமுறைக்கான மொபைல் சேவை தொழில் நுட்பமாகும். அப்படிப்பட்ட இந்த 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தினை அடுத்த ஆண்டு அரசு ஏலம் விட வாய்ப்புள்ளது. ஆக மொத்தத்தில் இந்தியாவில் 5ஜி சேவைகள் விரைவில் வரலாம்..