இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாரத்தின் கடைசி நாளான இன்று தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இன்று காலை முதல் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் ரிலையன்ஸ் காலாண்டு முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், மாலை 8 மணிக்கு காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டிசம்பர் காலாண்டு முடிவில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 20,539 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 14,894 கோடி ரூபாயை லாபமாகப் பெற்று இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 37.90 சதவீத உயர்வை தற்போது பதிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் லாபம் 23 சதவீதமும், டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ 8.9 சதவீத லாப உயர்வைப் பதிவு செய்துள்ளது என மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
வருவாய்
டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருவாய் 54.25 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் 1,23,997 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பதிவு செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது 1,91,271 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.
முகேஷ் அம்பானி
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, விழாக்காலம், லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக ரீடைல் பரிவின் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் நுகர்வோர், ரீடைல், டிஜிட்டல் வர்த்தகம் என அனைத்தும் வரலாறு காணாத வகையில் வருவாய் மற்றும் EBITDA-வை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் 8.9 சதவீதம் அதிகரித்து 3,795 கோடி ரூபாயும், வருவாய் 13.8 சதவீத உயர்வில் 24,716 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. டிசம்பர் காலாண்டில் 1.02 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஜியோ-வின் ARPU அளவு 151.6 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் டேட்டா டிராபிக் வர்த்தகம் 47.8 சதவீதம் உயர்ந்துள்ளது.