இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாகப் பல முக்கியமான நிர்வாக மாற்றங்களைச் செய்து வருகிறது.
இதன் படி இன்று முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கச்சா எண்ணெய் முதல் கெமிக்கல் வரையிலான வர்த்தகங்களைத் தனி நிறுவனமாகப் பிரித்துள்ளது என அறிவித்துள்ளது.
இந்தப் புதிய வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் O2C,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த நிர்வாக மறுசீரமைப்பு மூலம் இப்பிரிவு வர்த்தகம் எதிர்கால வளர்ச்சிக்காகப் புதிய வர்த்தகங்களை எதிர்நோக்கியுள்ளது. இதில் முக்கியமாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சவுதி அராம்கோ டீல்-ம் அடங்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் தற்போது டெலிகாம் சேவை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பெயரிலும், ரீடைல் வர்த்தகம் முழுவதுமாக ஒரு பேகேஜ் வடிவில் ரிலையன்ஸ் ரீடைல் கீழ் இருப்பது போல் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் கீழ் நேரடியாக இருக்கும் கச்சா எண்ணெய் முதல் கெமிக்கல் வர்த்தகம் வரையில் இருக்கும் வர்த்தகத்தைத் தனியாகப் பிரிப்பதே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் நடவடிக்கை.
ரிலையன்ஸ் நிர்வாகம்
இந்த மறுசீரமைப்பு மூலம் நிர்வாகம், தலைவர்கள், வர்த்தகம், தினசரி நடவடிக்கைகள் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இந்த வர்த்தகத்தைப் பிரித்தது மூலம் ரிலையன்ஸ் நிர்வாகம் முழுமையான கவனத்தைச் செலுத்தி இப்பிரிவு வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியும். மேலும் இப்பிரிவில் கேப்பிடல் ஸ்டெக்சர் வலிமை அடையும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் வர்த்தகம்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீண்ட காலமாகத் தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் பங்குகளைச் சவுதி நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான அராம்கோ நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று, சவுதியின் நிதிநிலை ஆகிய பல்வேறு காரணங்களால் இந்த வர்த்தக விற்பனை தள்ளிப்போனது.
டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகம்
இதன் பின்பு தான் முகேஷ் அம்பானி தனது டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவின் பங்குகளை விற்பனை செய்யச் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டியது. இந்த முதலீட்டு மூலம் டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைப் பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில் தற்போது மீண்டும் முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம் கச்சா எண்ணெய் வர்த்தகம் மீது திருப்பியுள்ளது.
20 சதவீத பங்குகள்
ஆகஸ்ட் 2019ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கச்சா எண்ணெய் முதல் கெமிக்கல் வர்த்தகப் பிரிவில் சுமார் 20 சதவீத பங்குகளைச் சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்பு நிறுவனங்களும் மிகப்பெரிய வர்த்தக லாபம் இருக்கும் காரணத்தால் ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் - அராம்கோ டீல் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ரிலையன்ஸ் O2C லிமிடெட்
ரிலையன்ஸ் O2C லிமிடெட் எனக் கூறப்படும் இப்புதிய வர்த்தகம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்தின் பிரிவுக்கு இறுதி ஒப்புதல் பெற இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் மற்றும் பங்கு உரிமையாளர்கள் மத்தியில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
2.18 லட்சம் கோடி ரூபாய் வருமானம்
ரிலையன்ஸ் O2C லிமிடெட் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 2.18 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானத்தையும், 26,763 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது. மேலும் டிசம்பர் காலாண்டின் முடிவில் இப்பிரிவின் மொத்த சொத்து மதிப்பு 3.6 லட்சம் கோடி ரூபாய். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பில் 28 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.