ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் சவுதி ஆராம்கோ முதலீட்டுத் திட்டம் கைநழுவிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் மற்றும் ரீடைல் துறையில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டிய நிலையில், கச்சா எண்ணெய் வர்த்தகப் பிரிவிலும் முதலீட்டைப் பெற வேண்டும் என முடிவு செய்து தான் O2C எனப் புதிய பிரிவை உருவாக்க முடிவு செய்தது.
ஆனால் தற்போது ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து O2C நிறுவனத்தைத் தனியாகப் பிரிக்கும் திட்டத்தைக் கைவிட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முகேஷ் அம்பானி
வெள்ளிக்கிழமை இரவில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது கச்சா எண்ணெய் சார்ந்த வர்த்தகத்தை O2C பிரிவுக்குத் தனியாகப் பிரிக்கத் திட்ட ஒப்புதலுக்காகத் தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் சவுதி ஆராம்கோ
ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் சவுதி ஆராம்கோ நிறுவனத்திற்கு 20 சதவீத பங்குகளை விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டுவது மட்டும் அல்லாமல் சவுதி ஆராம்கோ உடன் இணைந்து ரீடைல் எரிபொருள் விற்பனை சந்தையில் பெரும் மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டு இருந்தது.
O2C பிரிவு
ஆனால் தற்போது O2C பிரிவைத் தனியாகப் பிரிக்கும் முடிவைக் கைவிட்டது மட்டும் அல்லாமல் இரு தரப்பும் தங்களின் நன்மைக்காகப் புதிய முதலீட்டுத் திட்டத்தைத் திட்டமிட முடிவு செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சவுதி ஆராம்கோ தலைவரை ரிலையன்ஸ் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெலிகாம் மற்றும் ரீடைல் பிரிவு
ஆரம்பம் முதல் சவுதி ஆராம்கோ முதலீட்டுக்காகத் தான் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் இலக்கு நிர்ணயம் செய்தது, ஆனால் கச்சா எண்ணெய் விலை சரிவால் தாமதம் ஆன நிலையில் டெலிகாம் மற்றும் ரீடைல் பிரிவில் முதலீட்டைத் திரட்ட களத்தில் இறங்கியது. மீண்டும் கச்சா எண்ணெய் பிரிவில் முதலீட்டை திரட்ட முடிவு செய்த போது தான் O2C பிரிவைத் தனியாகப் பிரிக்க முடிவு செய்தது.
தோல்வி...!!
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் மற்றும் சவுதி ஆராம்கோ-வின் இந்த முயற்சி கிட்டதட்ட தோல்வி அடைந்த வேளையில், ரிலையன்ஸ் சவுதி ஆரம்கோ தான் எங்களுடைய விருப்பமான முதலீட்டாளர், விரைவில் புதிய முதலீட்டுத் திட்டத்துடன் வர்த்தகத்தை நகர்த்துவோம் என அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.35 சதவீதம் உயர்ந்து 2,472.75 ரூபாய் அளவில் முடிவடைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் 2,731 ரூபாய் அளவில் இருந்து தொடர்ந்து சரிந்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்பு திங்கட்கிழமை பெரும் சரிவைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.