இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற நிலையில் அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இதனை அடுத்து இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிரதமருக்கு வாழ்த்து
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அவர்கள் சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற நிலையில் உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் பிரதமர் மோடி இன்று இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி - ரிஷி சுனக் பேச்சுவார்த்தை
இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகிய இரு தலைவர்களும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விரைவில் வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வர்த்தக ஒப்பந்தங்கள்
பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்றும் எங்களது கூட்டாண்மையால் இரு நாடுகளும் இணைந்து வலுவாக செயல்படஉதவியாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விரிவான மற்றும் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே எடுக்க நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டோம் என்றும் அவர் அந்த சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
எதிர்கால முயற்சி
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறிய போது பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு தனது நன்றி என்றும் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டணியை உறுதி செய்வதில் இரு ஜனநாயக நாடுகளும் எதிர்கால முயற்சிகள் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரேவர்மேன்
இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான FTA பேச்சுவார்த்தை இதன் மூலம் மீண்டும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் உள்துறை செயலாளர் பிரேவர்மேன் அவர்கள் கூறியபோது, 'இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே ஏற்பட்டுள்ள ஒரு சில அச்சம் விரைவில் தவிர்க்கப்படும் என்றும் இரு நாடுகளும் நட்பு நாடுகளாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு உறவு
ரிஷி சுனக் பதவி ஏற்றவுடன் உள்துறை செயலாளராக பிரேவர்மேன் அவர்களை மீண்டும் நியமித்துள்ளதை அடுத்து இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுடனான உறவு மேம்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
100 பில்லியன் டாலர்
இந்தியாவும் பிரிட்டனும் இந்த ஆண்டு ஜனவரியில் FTA பேச்சுவார்த்தைகளை தொடங்கிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகங்கள் 100 பில்லியன் டாலராக உயரும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகமாவதை இரு நாடுகளும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.