பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் வீட்டில் மனைவியுடன் சேர்ந்து கோ பூஜை செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பூஜை குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக்
பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரான ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் அரசில் நிதி அமைச்சராக பணியாற்றியவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் உள்ளார் என்பதும் அவருக்கு கடும் சவாலாக வெளியுறவுத் துறைச் செயலாளர் லிஸ் டிரஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'கோ' பூஜை
இந்த நிலையில் ரிஷி சுனக் தனது பிரிட்டன் வீட்டில் தனது மனைவி அக்சதா மூர்த்தியுடன் 'கோ' பூஜை வழிபாடு செய்துள்ளார். பசுவுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்யும் இந்த பூஜையின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்து மதத்தை பொருத்தவரை பசுக்கள் புனிதமானதாக கருதப்படுகிறது என்பதும் பசுக்களுக்கு பூஜை செய்வதை ஒரு வழக்கமாக செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தெய்வீகத்தை பின்பற்றும் வகையில் ரிஷி சுனக் தனது வீட்டில் மனைவியுடன் சேர்ந்து 'கோ' பூஜை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண ஜெயந்தி
ஏற்கனவே கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி அன்று ரிஷி சுணக் தனது வீட்டில் கிருஷ்ணருக்கு பிரார்த்தனை செய்யும் பூஜையை நடத்தினார் என்பதும், இதுகுறித்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்து மதத்தினர் கிருஷ்ணரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நிலையில், ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினார்.
இந்திய பாரம்பரியம்
ரிஷி சுனக் பெற்றோர்கள் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அது மட்டுமின்றி அவரது மனைவி அக்சதா மூர்த்தி இந்திய தொழிலதிபர் நாராயண மூர்த்தியின் மகள் என்பதும் தெரிந்ததே. எனவே இந்திய பாரம்பரியத்தை ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்சதா மூர்த்தி தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
பிரிட்டன் பிரதமர்
இந்தியாவை பல நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரிட்டனை ஆட்சி செய்யும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை ரிஷி சுனக் உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மூத்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான லிஸ் டிரஸ் அவருக்கு கடும் போட்டியாக உள்ளார். சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 34 சதவீதம் பேருக்கு ரிஷி சுனக் அவர்களுக்கு ஆதரவு அளித்ததாகவும் 66 சதவீதம் பேர் லிஸ் டிரஸ் அவர்களுக்கு ஆதரவு அளித்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் இறுதி வாக்கெடுப்பில் தான் யார் பிரதமர் என்பது தெரியவரும்.
நம்பிக்கை
பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக ரிஷி சுனக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நடத்தப்படும் பூஜைகளில் ஒன்று இந்த 'கோ' பூஜை என்று கூறப்பட்டு வருகிறது.