இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு செய்யப்படும் செலவுகள் இந்தியாவின் ஜிடிபியை பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஏற்படும் அதிக அளவிலான விபத்துக்களுக்கு இந்தியா அதிகமாக செலவு செய்து வருகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகரித்தாலும் இந்தியாவில் விபத்துக்களும், விபத்துக்களுக்காக செய்யப்படும் செலவுகள் மிக அதிகம் என்று உலக வங்கி கூறியுள்ளது.
கொரோனாவும் விபத்துக்களும்
சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் சாலை விபத்து "கோவிட்-19 தொற்றுநோயை விட ஆபத்தானது என்று கூறியதில் இருந்து இந்தியாவின் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். இந்திய விபத்துக்கள் குறித்த ஆய்வில், இந்தியாவில் ஆண்டுக்கு 20,554 உயிர்களை விபத்துக்களை தடுப்பதன் மூலம் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளது.
விபத்துக்களுக்கு காரணம்
அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட்களை யன்படுத்தாமல் இருப்பது ஆகியவை விபத்துகளுக்கு காரணம் என்றும், உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 13.5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகிறது என்றும், இவற்றில் 25% முதல் 40% வரை சில விதிமுறைகளை கடைபிடித்தால் தடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வு
வேகமாக செல்வதைக் கட்டுப்படுத்துதல் மூலம் 20,554 உயிர்களை காப்பாற்றலாம் என்றும், ஹெல்மெட்களை அணிய ஊக்குவிப்பதன் மூலம் 5,683 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட்களை பயன்படுத்தினால் இந்தியாவில் 3,204 உயிர்களை காப்பாற்ற முடியும் என ஆய்வில் குறிபிடப்பட்டுள்ளது.
சாலை விபத்து அறிக்கை
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் 2020ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, சாலை விபத்துகளால் மொத்தம் 1,31,714 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இதில் அதிவேகத்தால் 69.3% இறப்புகள் அதாவது 91,239 பேர்களும், ஹெல்மெட் அணியாததால் 30.1% இறப்புகள் அதாவது 39,798 பேர்களும் மற்றும் சீட் பெல்ட்களை பயன்படுத்தாத காரணத்தினால் 11.5% இறப்புகள் அதாவது 26,896 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முதலிடம்
உலக வங்கியின் அறிக்கையின்படி, உலகிலேயே அதிக சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வாகனங்களில் 1% மட்டுமே இந்தியாவில் இருந்தாலும் சாலை விபத்துகளில் ஏற்படும் உலகளாவிய இறப்புகளில் இந்தியா 11 சதவிகிதம் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்
4.5 லட்சம் சாலை விபத்துகள்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.5 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும், அதில் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், 'சாலை விபத்து இறப்புகள் மற்றும் காயங்களில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. உலகின் வாகனங்களில் 1 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா அனைத்து சாலை விபத்து இறப்புகளில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்தியா ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துக்களை சந்திக்கின்றது. ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் உயிரிழக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சாலைகளில் சுமார் 13 லட்சம் பேர் இறந்தனர் மற்றும் 50 லட்சம் பேர் காயமடைந்தனர்.
விபத்துக்களால் ஜிடிபி பாதிப்பு
உலக வங்கியின் அறிக்கையின்படி, விபத்துக்கள் காரணமாக ரூ. 5.96 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.14% செலவாகிறது. 2019 ஆம் ஆண்டில் உலக வங்கியால் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், 'சாலை பாதுகாப்பு வாய்ப்புகள் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளின் நாடு விவரங்கள்' என்ற தலைப்பில் இந்தியாவுக்கு சாலை விபத்துக்களால் ஏற்படும் கடுமையான காயங்களுக்கு ரூ. 12.9 லட்சம் கோடி அல்லது நாட்டின் 7.5 சதவீதம் செலவாகும் என்று தெரியவந்துள்ளது.
சாலை விபத்துக்களால் செலவுகள்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடத்திய ஆய்வில், சாலை விபத்துகளின் சமூக-பொருளாதார செலவுகள் ரூ.1,47,114 கோடி அல்லது இந்தியாவின் ஜிடிபியில் 0.77 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்கள்
அதிக வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மூன்று மடங்கு அதிகமான சாலை விபத்து இறப்பு விகிதங்களை பதிவு செய்துள்ளன. உலக வங்கியின் கூற்றுப்படி, "ஏழை மக்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்கள் சாலை போக்குவரத்து விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறியுள்ளது.
சேமிப்பு
விபத்தால் ஏற்படும் உயிரிழப்பதைத் தடுப்பதன் மூலமும், காயங்கள் ஏற்படுவதை குறைப்பதன் மூலமும் ஒரு நபருக்கு ரூ.90 லட்சத்துக்கு மேல் சேமிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
விபத்துகளை தவிர்ப்பது எப்படி?
மின்னணு வேகக் கட்டுப்பாடு மற்றும் உள்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 3,47,258 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டும் விதிகளை மேம்படுத்தினால் 16,304 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும், சீட்பெல்ட் மற்றும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிவதற்கான விதிகளை கடுமையாக அமல்படுத்தினால் முறையே 1,21,083 மற்றும் 51,698 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கு
2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் விபத்து எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதை நோக்கமாக அமைச்சர் நிதின் கட்கரி கொண்டுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடான சாலைப் பாதுகாப்பு குறித்த பிரேசிலியா பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களால் ஏற்படும் உலகளாவிய இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கையில் பாதியை எட்டுவதை நாடுகள் இலக்காக கொண்டுள்ளன.