பிரிட்டனைச் சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் போனஸ் மற்றும் சம்பள உயர்வு குறித்த விவரங்களை அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மிகப் பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் காரணமாக பொருளாதார சிக்கலில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
பணவீக்கம் காரணமாக உலகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது என்பதும் இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
பணவீக்கம்
பணவீக்கத்தை சமாளிப்பதற்காக இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் சாதாரண பொதுமக்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்
இந்த நிலையில் பணவீக்கம் காரணமாக அதிகரிக்கும் செலவினங்களை சமாளிப்பதற்காக உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுமார் 2 லட்ச ரூபாய் போனஸ் மற்றும் ஒரு சில ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
2500 டாலர் போனஸ்
பணவீக்கம் காரணமாக ஏற்பட்ட செலவினங்களை சமாளிக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது 14,000 ஊழியர்களுக்கு சுமார் 2500 டாலர் போனஸ் ரொக்கமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதேபோல் 11,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகையையும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திக் மொத்தம் உள்ள 14,000 ஊழியர்களில் 11 ஆயிரம் ஷாப் ஃப்ளோர் ஊழியர்கள் மற்றும் 3000 ஜூனியர் மேனேஜர்கள் ஆகியோர்களுக்கு 2500 டாலர் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஷாப் ஃப்ளோர் ஊழியர்கள் 11,000 பேருக்கு போனஸ் தொகை மற்றும் 4 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பணவீக்கத்தின் சிக்கலிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
தலைமை நிர்வாகியின் அறிவிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல் மற்றும் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்திவரும் போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் இந்த பொருளாதார சிக்கலில் இருந்து நிவாரணம் பெற இந்த போனஸ் மற்றும் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வாரன் ஈஸ்ட் அவர்கள் தெரிவித்துள்ளார்.