இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு-ன் தாய் நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ்-ன் நிர்வாகத் தலைவராக மீண்டும் சித்தார்த்தா லால் நியமிக்கப்படும் முடிவிற்குப் பங்குதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒரு நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் போது உயர்மட்ட நிர்வாகத்தில் எவ்விதமான மாற்றத்தையும் நிர்வாகம் செய்யாது. ஆனால் எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிர்வாகத் தலைவரையே ஒரு சின்னக் காரணத்திற்காகப் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்புக் காலம்
கொரோனா பாதிப்புக் காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகமான வர்த்தகப் பாதிப்புகளையும், உற்பத்தி பாதிப்புகளையும் எதிர்கொண்ட நிலையில், அனைத்தையும் தகர்த்துச் சிறப்பான வர்த்தகத்தை எய்ச்சர் மோட்டார்ஸ் பெற்றது. இக்காலகட்டத்தில் வருமானம் மட்டும் அல்லாமல் லாபத்திலும் சிறப்பான லாப வளர்ச்சியைச் சித்தார்த்தா லால் தலைமையில் எய்ச்சர் மோட்டார்ஸ் அடைந்தது.
எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம்
எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 39வது வருடாந்திர கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் எய்ச்சர் மோட்டார்ஸ் நிர்வாகம் சித்தார்த்தா லால் அவர்களை மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்படும் திட்டத்தையும், அதனுடன் அவருக்கு 10 சதவீத ஊதிய உயர்வு திட்டத்தையும் நிர்வாகக் குழுவின் முன் வைக்கப்பட்டது.
சித்தார்த்தா லால் தலைமை
சித்தார்த்தா லால் தலைமையில் எய்ச்சர் மோட்டார்ஸ் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருவதால் இவரை மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்படுவது நிர்வாகக் குழுவிற்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் 10 சதவீதம் சம்பள உயர்வு தான் நிர்வாகக் குழுவிற்குப் பெரும் பிரச்சனையாகத் தெரிந்துள்ளது. இதனால் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சித்தார்த்தா லால் அவர்களை மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமிக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
10 சதவீத சம்பள உயர்வு
வெறும் 10 சதவீத சம்பள உயர்வால் சித்தார்த்தா லால் தனது நிர்வாகத் தலைவர் பதவியை இழக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதற்கு நிர்வாகக் குழுவில் இருக்கும் பங்குதாரர்கள் சில முக்கியமான காரணத்தை முன்வைக்கின்றனர். இந்தக் காரணம் எய்ச்சர் மோட்டார்ஸ்-க்கு மட்டும் அல்லாமல் அனைத்து நிறுவனங்களும் பொருந்தும் அளவில் தான் உள்ளது.
ஊழியர்களின் சம்பள அளவு
எய்ச்சர் மோட்டார்ஸ் நிர்வாகக் குழுவில் இருக்கும் பங்குதாரர்கள் 2021ஆம் நிதியாண்டில் நிறுவனத்தில் பணியாற்றும் மீடியன் ஊழியர்களின் சம்பள அளவு வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில் சித்தார்த்தா லால்-க்கு 10 சதவீதம் சம்பள உயர்வு அளிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் இதுகுறித்து விளக்கத்தையும் முடிவுகளைும் எய்ச்சர் மோட்டார்ஸ் இதுவரை வெளியிடவில்லை.
சித்தார்த்தா லால் சம்பள அளவு
சித்தார்த்தா லால் 2021ஆம் ஆண்டுக்கு 21.2 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றார், ஆனால் 2022ஆம் நிதியாண்டில் 10 சதவீதம் சம்பள உயர்வுடன் 23.23 கோடி ரூபாய்ச் சம்பளமாக வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதில் 32 சதவீத தொகை லேரியபிள் பே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் சித்தார்த்தா லால் வாங்கி 21.13 கோடி ரூபாயும் இந்நிறுவனத்தின் நடுத்தர ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விடவும் 340 மடங்கு அதிகமாகும்.
வினோ தசாரி வெளியேற்றம்
சமீபத்தில் எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியக் கிளை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வினோ தசாரி வெளியேறிய நிலையில், எய்ச்சர் மோட்டார்ஸ் நிர்வாகம் உடனடியாகப் பி.கோவிந்தராஜன் அவர்களை இப்பதவியில் நியமித்தது. இவர் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்.
பிற ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Guenter Butschek, அப்போலோ டையர்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீரஜ் கன்வார் ஆகியோரின் சம்பள உயர்வுக்குத் தத்தம் நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது எய்ச்சர் மோட்டார்ஸ் நிர்வாகமும் சித்தார்த்தா லால் சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு வளர்ச்சி
சித்தார்த்தா லால் தலைமையில் ராயல் என்ஃபீல்டு வரலாற்று காணாத உச்சத்தை அடைந்து இந்திய இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல் எய்ச்சர் மோட்டார்ஸ் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஸ்வீடன் நாட்டின் டிரக் மற்றும் பஸ் தயாரிக்கும் வால்வோ நிறுவனத்துடன் செய்த கூட்டணி மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவன பங்குகள்
எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 50.78 சதவீத பங்குகளைத் தனது ப்ரோமோட்டர்களும், 28.83 சதவீத பங்ககுளை வெளிநாட்டு முதலீட்டாளர்களும் (FPI), உள்நாட்டு மியூச்சுவல் பண்டுகள் 5.84 சதவீத பங்குகளும், எல்ஐசி 1.56 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர். மீதமுள்ள பங்குகள் சிறு முதலீட்டாளர்களும், ரீடைல் முதலீட்டாளர்களும் வைத்துள்ளது.
சித்தார்த்தா லால் சம்பள முடிவு
சித்தார்த்தா லால் சம்பளத்தை உயர்த்தும் திட்டத்திற்கு 26.95 சதவீத பங்குதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களாகிய நீங்களும், ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக உங்கள் முடிவு என்ன..? சம்பளத்தை உயர்த்தலாமா..? வேண்டாமா..? பதிலை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க...
எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் விலை 0.43 சதவீதம் உயர்ந்து 2,601.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவன பங்கு மதிப்பு மட்டும் சுமார் 21.75 சதவீதம் அதிகரித்துள்ளது.