ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த "அம்மா உணவகங்கள்" இன்றளவும் எண்ணற்ற ஏழை எளியவர்களின் பசியை ஆற்றி வருகிறது. அதுவும் காலை நேரங்களில் அம்மா உணவகங்கள் பரபரப்புடன் இருக்கும். கையில் தூக்கு வாளியுடன் கட்டுமான தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் இட்லி வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒருபுறம் வயதானவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அதிகாலையிலேயே தங்களுடைய வேலைகளை தொடங்கும் நபர்களுக்கு பசியை போக்கும் அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள் திகழ்கிறது.
நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளியவர்கள் பசியுடன் பணிக்குச் செல்லக்கூடாது என்ற உன்னத நோக்கில் 2013-ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்டது தான் இந்த அம்மா உணவகங்கள். இங்கு இன்றளவும் இட்லி வெறும் 1 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தயிர் சாதம் வெறும் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்.
வேறு எந்த ஹோட்டல்களிலும் இல்லாத விலையில், உணவு வழங்கி வந்த அம்மா உணவகங்கள் சமீபத்திய ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது. சில அம்மா உணவகங்களில் உடைந்த நாற்காலிகள், தேய்ந்து போன சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவின் தரம் குறைந்ததாகவும் புகார்கள் எழுந்தன. ஜெயலலிதாவிற்கு பிறகு ஆட்சி மாற்றங்கள் இருந்தாலும், அம்மா உணவகங்களை சரிவர பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் முதல்வர் விஜய் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, சமையலறையை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போது, பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்தது. ஆனால் அந்த சூழ்நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும், ஏழை எளிய குடும்பங்களுக்கும் அம்மா உணவகங்கள் தான் 3 வேளையும் உணவு வழங்கியது. தமிழ்நாட்டில் தற்போது 620 அம்மா உணவகங்கள் உள்ளன. இதில் சென்னை மாநகராட்சியின் கீழ் 383 உணவகங்களும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 237 அம்மா உணவகங்களும் இயங்கி வருகின்றன.
பெரிய பெரிய அண்டாக்கள் வைத்து தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் இங்கு சமைக்கப்படுகிறது. அதை நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஜாதி மத பேரமின்றி நின்று கொண்டே வாங்கி உண்பது தான் அம்மா உணவகத்தின் மற்றொரு சிறப்பம்சம். இன்றைய சூழலில் 100 ரூபாய் இருந்தாலே 3 வேளையும் பிற ஹோட்டல்களில் சாப்பிடுவது கஷ்டம். ஆனால் வெறும் 30 ரூபாய் இருந்தாலே ஒருநாள் முழுக்க அம்மா உணவகங்களில் பசியாற்றிக் கொள்ளலாம்.
இன்றளவும் எப்படி 1 ரூபாய்க்கு இட்லி கொடுக்க முடிகிறது? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு எப்படி சாமானியர்களை வாட்டி வதைக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அப்படிப்பட்ட சூழலிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் இந்த திட்டம் தமிழகத்தின் பசி இல்லா சமுதாயத்திற்கு வித்திட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.


Click it and Unblock the Notifications