இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பல சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் அது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணம் சார்ந்த சலுகைகளை பெறாமல் விட்டுவிடுகின்றனர். பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய சலுகை தான் ஈபிஎஃப்ஓ வழங்கும் இலவச இன்சூரன்ஸ்.
வேலைக்கு செல்லகூடிய கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வுகால சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நம் சம்பளத்தில் ஒரு தொகையும் நிறுவனம் தரப்பில் ஒரு தொகையும் என பிஎஃப் கணக்கில் மாதம் தோறும் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த பணத்தை நாம் பணி ஓய்வு பெறும் போதும், இடைப்பட்ட காலத்திலும் பெற்று கொள்ளலாம்.

பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி விரைவில் ஈபிஎஃப்ஓ 3.0 மூலம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கிடையே பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் 7 லட்சம் ரூபாய் வரை லைஃப் இன்ஷூரன்ஸ் அதாவது ஆயுள் காப்பீடு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இந்த 7 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற பிஎஃப் சந்தாதாரர்கள் எந்த பிரீமியமும், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. பிஎஃப் கணக்கு இருந்தாலே இந்த 7 லட்சம் தானாக கிடைக்கும்.
EDLI (Employees' Deposit Linked Insurance) திட்டத்தின் கீழ் இந்த இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. பிஎஃப் மற்றும் பென்ஷன் சலுகைகளுக்கு அடுத்தபடியாக EDLI முக்கிய சலுகையாக பிஎஃப் கணக்கின் வாயிலாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கிடைக்கிறது.
பிஎப் கணக்கு இருந்தாலே போதும், தானாகவே இந்த காப்பீடு பொருந்தும். ஊழியர் எந்த பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் பணியாற்றும் நிறுவனமே இதற்கான பணத்தை செலுத்துகிறது. ஊழியர் தரப்பில் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டாம், இதற்காக மருத்துவ பரிசோதனை கூட செய்ய தேவையில்லை.
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால் இந்த இன்சூரன்ஸ் அவரது நாமினிக்கு கிடைக்கும். இது ஊழியரின் குடும்பத்தை நிதி சுமையில் இருந்து பாதுகாக்கும் ஒரு கருவி. அலுவலகத்தில் விபத்து நடந்தாலும் சரி, விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது ஏற்பட்டாலும் சரி, இந்த காப்பீடு தொகை 7 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கு கிடைக்கும். பிஎஃப் கணக்கு உள்ள அனைத்து ஊழியர்களும் இதைப் பெற தகுதியானவர்கள். இதற்காக தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் பூர்த்தி செய்யப்பட தேவையில்லை.
EDLI திட்டத்தில் குறைந்தபட்சம் 2.5 லட்சமும், அதிகபட்சம் 7 லட்சமும் கிடைக்கும். இந்த தொகை ஊழியரின் கடைசி 12 மாத ஊதியம் மற்றும் பிஎஃப் இருப்பை வைத்து கணக்கிடப்படும். ஊதியம் மற்றும் பிஎஃப் இருப்பு அதிகமாக இருந்தால் காப்பீடு தொகையும் அதிகரிக்கும். பிஎஃப் கணக்கு உள்ளவர்கள் உங்களின் நாமினி, கேஒய்சி விவரங்களை அப்டேட்டாக வைத்திருப்பதன் மூலம் இலவச காப்பீடை பெறலாம்.


Click it and Unblock the Notifications

