டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் பல மாற்றங்கள், தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும் இன்றளவும் தவறான வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.
அக்கவுன்ட் நம்பரில் ஒரு எண் மாறினால் கூடப் பணம் தவறான கணக்கிற்குச் சென்று விடும் என்பதால் பார்த்துச் செய்தாலும், சில நேரத்தில், சில திருணத்தில் தவறான கணக்கிற்குப் பணம் அனுப்பும் சூழ்நிலை உருவாகிறது.
அப்படித் தான் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது.
38 வயது பெண்
மும்பை-யில் மிரா சாலையில் வசிக்கும் 38 வயதான பெண் இண்டர்நெட் பேங்கிங் வாயிலாகத் தனது உறவினருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் அனுப்ப முயற்சி செய்துள்ளார். அப்போது தவறான வங்கி கணக்கு எண்-ஐ பதிவு செய்து பணம் அனுப்பியுள்ளார்.
7 லட்சம்
இந்தத் தவறு மூலம் மும்பையைச் சேர்ந்த மற்றொரு நபரின் வங்கி கணக்கிற்கு அப்பெண்ணின் பணம் வந்துள்ளது. இதன் பின்பும் அப்பெண் வங்கியை அணுகியுள்ளார், தவறு அவருடையது என்றதால் வங்கிகள் உதவ மறுத்துவிட்டது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தால் அப்பெண் ஒரு முடிவு செய்தார்.
சைபர் செல் போலீஸ்
ஜூன் 30ஆம் தேதி அப்பெண் மும்பை வாசை விரார் காவல் நிலையத்தின் சைபர் செல் பிரிவில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பெற்ற சைபர் பிரிவு போலீசார் அவ்வங்கி கணக்கின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு அப்பெண்ணின் பணத்தைக் கொடுக்கப் போலீசார் கோரியுள்ளனர்.
லாட்டரி நாடகம்
7 லட்சம் பணத்தைப் பெற்ற வங்கி உரிமையாளர் தனக்கு இது லாட்டரி மூலம் கிடைத்த பணம் எனக் கூறி பணத்தைக் கொடுக்க மறுத்தார். ஆனால் போலீசாரின் கண்டிப்பான பேச்சிலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியதால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
உஷார்
இதன் மூலம் மிரா சாலை பெண்-க்கு சைபர் செல் பிரிவு போலீசார் உதவியால் ஜூலை 2ஆம் தேதி பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால் உண்மையில் இதுபோன்ற தவறுகள் நடப்பது மிகவும் அரிதானது. எனவே பணத்தை அனுப்பும் போது ஒரு முறைக்கு இரு முறை செக் செய்வது முக்கியம்.


Click it and Unblock the Notifications