இந்தியாவில் மிகவும் பிரபலமான பங்குச்சந்தை முதலீட்டாளராக இருக்கும் ரகேஷ் ஜூன்ஜூன்வாலா முதலீடு செய்துள்ள பிரகாஷ் பைப்ஸ் கடந்த ஒரு வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 432.5 சதவீத லாபம் அளித்துள்ளது.
மார்ச் 26, 2020ல் பிரகாஷ் பைப்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை வெறும் 22.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்த, இதேகாலகட்டத்தில் 2021ஆம் ஆண்டில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 118.75 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 432.5 சதவீதம் வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது. உதாரணமாக நீங்கள் இந்நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாயை 2020 மார்ச் 26ஆம் தேதி முதலீடு செய்திருந்தால், தற்போது இதன் மதிப்பு 5.32 லட்சம் ரூபாயாகும்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 2019 ஜூன் காலாண்டில் இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யத் துவங்கினார். டிசம்பர் காலாண்டு முடிவில் பிரகாஷ் பைப்ஸ் நிறுவனத்தின் 1.53 சதவீத பங்குகளை வைத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சுமார் 3,12,500 பங்குகளை வைத்துள்ளார்.
பிவிசி பைப், பிட்டிங்க்ஸ், பிலெக்சிபிள் பேகேஜ் போன்றவற்றைத் தயாரித்துப் பிரகாஷ் என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது. விற்பனையிலும், லாப அளவீட்டிலும் தொடர் வளர்ச்சியைச் சந்தித்து வரும் இந்நிறுவனத்தில் மார்ச் லாக்டவுனுக்குப் பின் அதிகளவிலான முதலீடுகள் குவித்தது. இதன் வாயிலாகவே கிட்டத்தட்ட 4 மடங்கிற்கும் அதிகமான வளர்ச்சியை வெறும் ஒரு வருடத்தில் அடைந்துள்ளது.