இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 14 மணி நேரம் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஆர்டிஜிஎஸ் (RTGS) என்ற பண பரிவர்த்தனை சேவை செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி எனலாம். ஏனெனில் வங்கிகளில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு நெஃப்ட் அல்லது ஆர்டிஜிஎஸ் உள்ளிட்ட சேவைகளை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் விடுமுறை நாட்களிலும் இந்த சேவையானது 24x7x365 மணி நேரமும் கிடைக்கும் என்பதால், இதற்கு வங்கி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்புண்டு.
மிக பாதுகாப்பான சேவை
அதோடு நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது. பரிவர்த்தனை செய்வது மிக எளிது என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் இதனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்டு செயல்படுங்கள்
இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் அதே சமயம் நெஃப்ட் (NEFT) முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக இந்த ஆர்டிஜிஎஸ் சேவையானது வங்கிகள் மூலம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆர்டிஜிஎஸ் சேவை
முன்னதாக இந்த சேவையானது வங்கி வேலை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செய்யப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் 24 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இந்த சேவையின் மூலம் மிகப்பெரிய ஒரு தொகையினை, ஒரு வங்கியின் கிளையில் இருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் பணம் அனுப்ப பயன்படும் சேவையாகும்.
மிகப்பெரிய தொகைகள் பரிமாற்றம்
இதன் மூலம் மிகப்பெரிய தொகையையும் வாடிக்கையாளர்கள் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதில் 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும். இதனை தாமதமில்லாமல் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.