ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ஒரு முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் அதனை விரைவுப்படுத்தும் விதமாக, பதஞ்சலி ஆயுர்வேதத்தின் முழு உணவு வணிகத்தினையும் 690 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த கையகப்படுத்தலில் நெய், தேன், மசாலா, ஜூஸ் மற்றும் ஆட்டா உள்ளிட்ட 21 பொருட்களை கொண்டுள்ளது.
கையகப்படுத்தலின் மதிப்பு
இந்த கையகப்படுத்தலின் மதிப்பானது 690 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன வாரியமும் உணவு வணிகத்தினை ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இது மே 9 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம்
இந்த கையகப்படுத்தலின் மத்தியில் இனி இந்த கூட்டு நிறுவனமானது பதஞ்சலி ஃபுட்ஸ் என மறுபெயரிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ருச்சி சோயா நிறுவனம் பதார்த்தா, ஹரித்வார் மற்றும் மகாராஷ்டிராவின் நெவாசா ஆகிய இடங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளையும் பெறவுள்ளது.
கவனிக்க வேணடிய விஷயம்
திவால் நிலைக்கு தள்ளப்பட்ட ருச்சி சோயா நிறுவனத்தினை 4350 கோடி ரூபாய்க்கு கைபற்றியது பதஞ்சலி நிறுவனம். இதையடுத்து, அண்மையில், ருச்சி சோயா 4,300 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு வந்தது. இந்நிலையில் ருச்சி சோயாவை, பதஞ்சலி நிறுவனத்தின் உணவு வணிக பிரிவுடன் இணைக்க வேண்டும் என்றும், நிறுவனத்தின் பெயரை, பதஞ்சலி புட்ஸ் நிறுவனம் என மாற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இன்றைய பங்கு விலை?
இப்பங்கின் விலையானது 9.60% அதிகரித்து, 1187.85 ரூபாயாக என் எஸ் இ-யில் முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1192.15 ரூபாயாகவும், இதே குறைந்தபட்ச விலை 1088 ரூபாயாகவும் உள்ளது.
இதே பிஎஸ்இ-ம் இப்பங்கின் விலையானது 9.59% அதிகரித்து, 1186.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1191.30 ரூபாயாகவும், இதே குறைந்தபட்ச விலை 1083 ரூபாயாகவும் உள்ளது.