மும்பை: கொரோனாவினால் இந்தியாவில் நுகர்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கலாம் என்றும் பிரபல பொருளாதார கணிப்பு நிறுவனமான கோல்டுமேன் சாச்சஸ் கணித்துள்ளது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 70 பைசா குறைந்து, 76.34 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சந்தைகள் தொடர்ந்து சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றது.
இதுவும் காரணம்
அன்னிய செலவாணி வர்த்தகர்கள் கச்சா எண்ணெய் சற்று உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்கா டாலர் மதிப்பும் ரூபாயின் மதிப்பில் வலுவடைந்துள்ளது. இது ரூபாயின் மதிப்பில் எதிரொலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த செவ்வாய் கிழமையன்று 75.64 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தைகள் வீழ்ச்சி
உள்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் பல இன்று எதிர்மறையான நிலையில் வர்த்தகம் ஆகின. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 173 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 29,893 ஆக உள்ளது. இதே தேசிய பங்கு சந்தையின் சென்செக்ஸ் 43 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,748 ஆகவும் உள்ளது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 76.37 ரூபாயாகவும் சரிந்துள்ளது.
கரன்சி சந்தை நேரம் குறைத்தல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி பணச் சந்தைகளுக்கான நேரங்களை குறைத்துள்ளது. இது தவிர கரன்சி சந்தையின் நேரத்தினையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரைக்கு மட்டுமே இருக்கும் எனவும், இது ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 17 வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்மறையான முதலீட்டாளர்களின் உணர்வு
இது எல்லாவற்றையும் விட உலகம் முழுக்க தனது ஆதிக்கத்தினை நிலை நாட்டியுள்ள கொரோனாவினால் உலகப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்களின் உணர்வு சந்தைக்கு எதிர்மாறாக உள்ளது. இதுவும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுத்தாகவும் கூறப்படுகிறது.
கொரோனாவின் தாக்கம்
தற்போதைய சூழலில் உலகளவில் 14.30 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ளன. இந்தியாவிலும் அதன் தாக்கம் தற்போது 5,000 தாண்டியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுக்க பலி எண்ணிக்கையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இந்தியாவில் மட்டும் இதுவரை 149 பேர் பலியாகியுள்ள நிலையில், உலகம் முழுக்க 83,401 பேர் பலியாகியுள்ளனர்.