திங்கட்கிழமை வர்த்தகம் முடியும் நேரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 30 பைசா சரிந்து 82.775 ஆக உள்ளது, இன்றைய நாணய சந்தையில் ஆசியாவில் அனைத்து முன்னணி நாணயங்களும் டாலருக்கு எதிரான சரிவைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் அதன் வட்டி விகித நிர்ணய செய்யும் நாணய கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூடுதல் கூட்டம் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாய் மதிப்பு அக்டோபர் மாதம் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிராகச் சுமார் 1.77 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து 10 மாதம் சரிவடைந்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. கடைசியாக ரூபாய் மதிப்பு 2021 டிசம்பர் மாதம் உயர்வுடன் முடிந்தது.
1985 ஆம் ஆண்டு
இந்திய ரூபாய் மதிப்பு 1985 ஆம் ஆண்டுக்குப் பின்பு நீண்ட காலச் சரிவைப் பதிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்திடாத வகையில் ரூபாய் மதிப்பு இந்த ஆண்டுச் சரிந்துள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் சூழ்நிலையும், சீனாவின் பொருளாதார மந்த நிலையும் ஆசிய நாணயங்களுக்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளது.
பெடரல் ரிசர்வ்
இதேவேளையில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த வாரம் 0.75 சதவீத வட்டி விகித உயர்வை வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பணவீக்கம் மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்த வட்டி விகித உயர்வால் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் டாலர் இன்டெக்ஸ் 111.05 வரையில் உயர்ந்துள்ளது.
இந்திய அரசு பத்திரம்
10 வருட இந்திய அரசு பத்திரம் மீதான முதலீட்டு லாபம் இன்று 7.4454 சதவீதமாக உள்ளது, வெள்ளிக்கிழமை அதன் அளவு 7.4161 சதவீதமாக இருந்தது. இதன் மூலம் அக்டோபர் மாதம் 10 வருட இந்திய அரசு பத்திரம் மீதான முதலீட்டு லாபம் 5 அடிப்படை புள்ளிகளும், செப்டம்பர் மாதம் 21 அடிப்படை புள்ளிகளும் உயர்ந்தது.
ரஷ்யா - உக்ரைன் போர்
இந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பு உலகளவில் நிலவிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனையைத் தீர்க்க 2022 ஜூலை மாதம் ரஷ்யா - உக்ரைன் மத்தியில், உக்ரைன் நாட்டில் இருந்து தானியங்களைக் கப்பல் வாயிலாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து ஒப்பந்தம் செய்தது.
உணவு பொருட்கள் பற்றாக்குறை
ஆனால் தற்போது கிரிமியா-வில் நடந்த டிரோன் அட்டாக் காரணம் காட்டி ரஷ்யா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடிவு செய்து ஏற்றுமதியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் உணவு பொருட்கள் பற்றாக்குறை அடுத்தச் சில நாட்களில் அதிகரித்து உணவு பணவீக்கம் அதிகரிக்கும்.
ஏவுகணை தாக்குதல்
இதைத் தொடர்ந்து இன்று காலையில் ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது தொடர்ந்து இரு தரப்புக்கு மத்தியில் அடுத்த சில நாட்களுக்குக் கடுமையான போர் நிலவும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் முதலீட்டுச் சந்தையும் பாதிக்கப்படும்.