மும்பை: கடந்த சில தினங்களாகவே ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து 75.04 ஆக காணப்படுகிறது.
அதிலும் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தாலும், ரூபாயின் மதிப்பானது சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இன்று காலை தொடக்கத்தில் 75.13 ரூபாயாக தொடங்கிய நிலையில், இது பின்னர் 75.04 ரூபாயாக சரிந்துள்ளது.
இது முந்தைய நாள் முடிவு விலையானது 75.01 ரூபாயாக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சந்தை நாளில் ரூபாயின் மதிப்பானது அதிகபட்சமாக 74.85 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், குறைந்தபட்சமாக 75.17 ரூபாயாக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்கு சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்தால் பங்கு சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பினையும் இது ஆதரித்தது.
இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 748 புள்ளிகள் அதிகரித்து, 37,687 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 203 புள்ளிகள் அதிகரித்து, 11,095 ஆக முடிவடைந்துள்ளது.
தற்காலிக பரிவர்த்தனை தரவுகளின் படி, வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் திங்களன்று ரூ.7,818.49 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளதால், மூலதன சந்தையில் நிகர வாங்குபவர்களாக இருந்தனர்.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது 1 சதவீதம் குறைந்து, பேரலுக்கு 43.71 டாலராக வர்த்தகமாகியுள்ளது. எனினும் இவை அனைத்தும் அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்று வரையில் 18,55,754 பேருக்கு கொரோனா தொற்று ஆளாகியுள்ளனர். 38,938 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு இன்று வரையில் சரியான தடுப்பு மருந்துகள் என்பது இது வரை கண்டுபிடிக்க முடியாததால், பொருளாதாரத்தின் நிலை என்னவாகுமோ என்ற உணர்வும் தொடர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 75 ரூபாய்க்கு மேல் இருந்து வருகிறது.