உலக நாடுகளில் புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் சந்தையில் பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை, ஒருபக்கம் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவினாலும் அதன் மூலம் பெரிய பாதிப்பு இல்லை என அமெரிக்காவின் தொற்று நோய் வல்லுனர் பவுசி கூறும் வேளையில், தென் ஆப்பிரிக்காவில் காட்டுத்தீ போலப் பரவி சுமார் 20000 பேரை பாதித்துள்ளது.
இது அனைத்தும் சர்வதேச பொருளாதாரத்திலும், வர்த்தகச் சந்தையிலும் பெருமளவிலான பாதிப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.60 ரூபாய் என்ற பெரிய அளவிலான சரிவை எட்டியுள்ளது. இது கிட்டதட்ட 2020ல் கொரோனா தொற்றுப் பாதிப்பு நிறைந்த ஜூலை மாத நிலவரமாகும், தற்போது மீண்டும் அதே நிலையை அடைந்துள்ளதால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையில் பெரும் இடைவெளி உருவாக உள்ளது.
ஒமிக்ரான் அச்சம்
மேலும் ஒமிக்ரான் அச்சத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகளை வெளியேற்றும் காரணத்தால் அன்னிய செலாவணி இருப்பும் படிப்படியாகக் குறைந்து இந்திய ரூபாய் மதிப்பை குறைத்து வருகிறது. இன்று காலை வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 75.45 ரூபாய் அளவில் துவங்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி
நேற்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை உள்நாட்டு முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருந்த நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் கவராத நிலையில் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறியது. இதனால் நேற்று ரூபாய் மதிப்பு 75.50 வரை சரிந்து 2 மாத சரிவை தொட்டது.
நாணய கொள்கை கூட்டம்
ரிசர்வ் வங்கியின் ஒமிக்ரான் பாதிப்புக் காரணமாக நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதம் தொடரும் என அறிவித்தது.
டாலர் ஆதிக்கம்
கொரோனா பாதிப்பு அதிகமான போது டாலர் ஆதிக்கம் அதிகரித்து ரூபாய் மதிப்பு 76.50 வரையில் சரிந்தது, இதேபோலத் தான் தற்போது நடந்து வருகிறது. மேலும் இந்தியாவில் எப்படி ஒமிக்ரான் வைரஸ் கட்டுப்படுத்தி வர்த்தகச் சந்தையைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைக்கப் போகிறோம் என்பது முக்கியமானதாக உள்ளது.