அமெரிக்க மத்திய வங்கி பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தனது பென்சமார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய நாளில் இருந்து முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று 81.90 வரையில் சரிந்து புதிய வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு 2022ல் மட்டும் சுமார் 9 சதவீதம் சரிவடைந்து நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.
அமெரிக்க டாலர் வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரிக்க உள்ளது.
அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலரின் வலிமையைப் பிற முன்னணி நாணயங்களுக்கு எதிராகக் கணக்கிடப்படும் US DOLLAR INDEX இன்று காலை வர்த்தகத்தில் 114.68 ஆக உயர்ந்துள்ளது. இது பல வருட வரலாற்று உச்ச அளவாகும், இதேபோல் அமெரிக்காவின் 10 வருட கருவூல பத்திர முதலீட்டின் லாப அளவு 4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இது 2010-க்கு பின்பு பதிவாகும் அதிகப்படியான வளர்ச்சியாகும்.
இந்திய ரூபாய் வீழ்ச்சி
இந்தத் துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.65 ரூபாயாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 81.30 - 81.64 வரையில் வர்த்தகமானது. இன்று 81.90 ரூபாய் அளவீட்டைத் தொட்ட நிலையில் நாளை அல்லது வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 82 ரூபாய் அளவீட்டைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க ரிசர்வ் வங்கி கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களுக்குச் சிறப்புப் பரிமாற்ற வழி, வெளிநாட்டு நாணய வைப்பார்களுக்குக் குறைவான ஹெட்ஜிங் செலவுகள் எனப் பலவற்றைச் செய்துள்ளது.
முதலீட்டாளர்கள்
ஆனால் உலக நாடுகள் பலவற்றும் வட்டி விகிதத்தை உயர்த்திய காரணத்தால் சரிவில் இருந்து தப்பிக்கப் பணத்தை மாற்று முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறது.
பிற நாணயங்கள்
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தால் இந்திய ரூபாய் மட்டும் அல்லாமல் பிரிட்டன் பவுண்ட், ஜப்பான் யென், சீனா-வின் யுவான், ஐரோப்பாவின் யூரோ என அனைத்தும் மோசமான சரிவை எட்டியுள்ளது. ஆனால் இந்த நிலை விரைவில் சரியாகும், அதேபோல் டாலர் பயன்பாட்டைக் குறைக்க இந்திய உட்படப் பல நாடுகள் திட்டமிட்டு வருகிறது.