அமெரிக்கப் பெடரல் வங்கி ஆகஸ்ட் மாத பணவீக்கத்தை அடிப்படையாக வைத்துப் புதன்கிழமை முடிந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் அதிகரித்தது.
இதன் எதிரொலியாக முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் சுமார் 20 வருட உயர்வான 111.72 அளவீட்டை எட்டியது. இதனால் ரூபாய் மதிப்பு 80.43 வரையில் சரிந்து வரலாற்று வீழ்ச்சியை அடைந்துள்ளது.
இதற்கு முன்பு ரூபாய் மதிப்பு அதிகப்படியாக 80.12 ரூபாய் வரையில் சரிந்திருந்த நிலையில், இன்று அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் புதிய வட்டி விகித உயர்வின் மூலம் 80.43 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் யாருக்கெல்லாம் லாபம்..? யாருக்கெல்லாம் நஷ்டம்..?
இந்தியா
உலகமயமாக்கல்-க்கு பின்பு இந்தியாவில் அதிகளவில் டாலரை பயன்படுத்தத் துவங்கியது மட்டும் அல்லாமல் அதிகளவில் டாலர் வருமானத்தையும் பெற துவங்கியது. இதனால் இந்திய வர்த்தகச் சந்தையில் டாலரின் ஆதிக்கம் சற்று கூடுதலாகவே உள்ளது.
லாபம்
டாலர் மதிப்பு ஏற்ற இறக்கத்தால் பலருக்கு பாதிப்பாக இருந்தாலும், குறிப்பிட்ட சில பிரிவினருக்கு லாபமாக உள்ளது என்றால் மிகையில்லை. அப்படி யாருக்கெல்லாம் இந்த 80.43 ரூபாய் வரலாற்று வீழ்ச்சி யாருக்கெல்லாம் லாபமாக அமைந்துள்ளது தெரியுமா..?
டாலர் வருமானம்
மேலோட்டமாகச் சொல்ல வேண்டும் என்றால் டாலரில் வருமானம் ஈட்டும் அனைவருக்கும் இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி லாபகரமானதாக உள்ளது. எல்லாருக்கும் ரூபாயில் தானே சம்பளம் கிடைக்கு, அப்புறம் எப்படி டாலரில் சம்பளம் வருவாய் என்று தானே கேட்குறீங்க..
ஐடி மற்றும் டெக் துறை
இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி மற்றும் டெக் துறை நிறுவனங்கள் உள்நாட்டைக் காட்டிலும் வெளிநாட்டில் இருந்து தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. இதற்கான வருமானம், கட்டணம் என அனைத்தையும் டாலரில் தான் பெறுகிறது.
பிற துறையினர்
இதேபோல் இணையத்தில் ப்ரீலான்ஸ் சேவை செய்வோர், இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் வைத்திருப்போர், வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து ராயல்டி பெறுவோர், கரன்சி எக்ஸ்சேஞ் செய்வோர், ஏற்றுமதி செய்வோர் எனப் பல பிரிவினர்கள் இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் மூலம் லாபமும், பலனும் அடைவார்கள்.
இறக்குமதி
ஆனால் மறுபக்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், தங்கம், வைரம், ஆடைகள், தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், ஆயுதம், உற்பத்தி பொருட்கள், மருத்து மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்தியாவும், இந்திய நிறுவனங்களும் டாலரில் தான் பணத்தைச் செலுத்துகிறது.
நஷ்டம்
இதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இறக்குமதியாளர்கள் 79.98 ரூபாய்க்கு பதிலாக 80.43 ரூபாய் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளராகிய மக்கள் தலையில் தான் விழும்.
விலை உயர்வு
எந்தொரு நிறுவனமாக இருந்தாலும் இதுபோன்ற விலை மாற்றத்தைச் சமாளிக்கத் தனது விற்பனை பொருட்களின் விலையில் 3-6 சதவீதம் வரையிலான Buffer வைத்திருக்கும், இந்த Buffer அளவீட்டைத் தாண்டும் வரையில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
மக்களுக்கு நெருக்கடி
ஆனால் இதைத் தாண்டிவிட்டால் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் விலை உயர்வும். இதனால் இந்திய மக்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலான தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தியா- ரஷ்யா
இதேவேளையில் இந்தியாவும்- ரஷ்யாவும் அமெரிக்க டாலர் அல்லாமல் ரூபாய் மற்றும் ரூபிள் ஆகிய நாணயத்தில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. இது முழுமையாகப் பயன்பாட்டு வராத நிலையில் யூரோவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்ற முயற்சியை இந்தியா - சவுதி அரேபியா-வுடன் துவங்கியுள்ளது.
ரஷ்யா, சவுதி அரேபியா, சீனா
ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் இருந்து தான் இந்தியா அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இவ்விரு நாடுகளிடம் முழுமையாக உள்நாட்டு வர்த்தக முறை அமலாக்கம் செய்யப்பட்டால் டாலர் தேவை குறைந்து ரூபாய் மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியைக் குறைக்க முடியும்.