அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பந்தாடி வரும் பணவீக்கத்தைக் குறைக்க அந்நாட்டின் மத்திய வங்கி இரண்டு நாள் நாணய கொள்கை முடிவில் பல தரப்பினர் எதிர்பார்த்தபடியே தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால் இதன் விளைவு அடுத்த சில மணிநேரத்தில் இந்திய சந்தையில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது, வட்டி விகித உயர்வால் இந்திய சந்தையில் இருந்த அன்னிய முதலீடுகள் வெளியேறத் துவங்கியது.
இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஓரே நாளில் 42 பைசா வரையில் குறைந்து பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க டாலர்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் அளவீட்டை இழந்து 80.43 ரூபாய் அளவில் சரிந்துள்ளது. இது இந்திய வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
பெடரல் வங்கி
அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வுக்குப் பின்பு அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் சுமார் 20 வருட உயர்வான 111.72 அளவீட்டை எட்டியது. இதனால் ரூபாய் மதிப்பு 80.43 வரையில் சரிந்து பெரும் சரிவை தொட்டு உள்ளது.
ரூபாய் மதிப்பு
இதற்கு முன்பு ரூபாய் மதிப்பு அதிகப்படியாக 80.12 ரூபாய் வரையில் சரிந்திருந்த நிலையில் புதிய வட்டி விகித உயர்வின் மூலம் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 3வது வட்டி விகித உயர்வு மூலம் ஆசிய பங்குச்சந்தை முழுவதும் சரிவைச் சந்தித்துள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வியாழக்கிழமை வர்த்தகத்தில் 58,973.07 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. ஆனால் அடுத்தச் சில நிமிடத்தில் உயர துவங்கிய காரணத்தால் சென்செக்ஸ் குறியீடு 210.82 புள்ளிகள் சரிந்து 59,251.19 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீடு 64.20 புள்ளிகள் சரிந்து 17,654.15 புள்ளிகளை எட்டியுள்ளது காலை வர்த்தகத்தில் அதிகப்படியான 17,580.40 வரையில் சரிந்துள்ளது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வால் அமெரிக்கப் பங்குச்சந்தையும் 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ஆர்பிஐ
செப்டம்பர் மாத 28-30 ஆம் தேதிகளில் ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ளது. அன்னிய முதலீட்டை வெளியேற்றவும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் ரெப்போ விகிதத்தை உயர்த்த உள்ளது.
லாபம்..? நஷ்டம்..?
ரூபாய் மதிப்பின் வரலாற்று வீழ்ச்சி காரணமாக டாலரில் வருமானம் ஈட்டும் அனைத்து தரப்பினரும் லாபம் தான், உதாரணமாக டெக் நிறுவனங்கள், யூடியூப் கிரியேட்டர்கள் போன்றோர்க்கு லாபம்.
ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் காரணத்தால் ரூபாய் மதிப்பு வரலாற்று வீழ்ச்சி அனைத்துத் தரப்பு நுகர்வோருக்கும் பாதிப்பு தான்.